உண்மையான தமிழ் அடையாளத்தையும் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களையும் தமிழர் மெய்யியலையும் தேடிய அந்த மனிதர் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் கந்த முருகேசனாராகும்.
தென் புலோலியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் ஆறுமுகநாவலரின் சற்சூத்திரக் கோட்பாட்டை நிராகரித்து ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை வலியுறுத்தினார். ‘அன்பே சிவம்’ என்பது தான் அவரது மெஞ்ஞானமாக இருந்தது. ‘மனிதர்கள் எல்லோரும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு செலுத்தவேண்டும்’ என்றும் ‘ஒவ்வொரு மனிதனும்; அடுத்தவரை நேசிப்பதிலும் அடுத்தவர்களுக்குரிய மரியாதையை கொடுப்பதிலும் தான் மனிதம் என்ற சொல்லுக்குரிய அர்த்தம் வெளிப்படுகிறது’என்றும் கூறிவந்தார்.
மனிதனை மனிதன் பிறப்பைக் கொண்டு இழிவுபடுத்தும் இந்துத்துவ வர்ணக் கோட்பாட்டை கடுமையாக விமர்சித்த அவர், இது தமிழர்களதுஅடையாளமோ பண்பாடோ இல்லை என்றும் அடித்துச் சொன்னார்.
‘சாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால்நீதி வழுவா நெறி முறையின்-மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி….’ என்பதே உண்மையான தமிழர் மரபு என்றும் வலியுறுத்தி வந்தார்.
“பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சிவயிறு வளர்க்கைக்கு மானம் அழியாதுஉயிர் விடுகை சால உறும்” என்ற ஒளவையாரின் நல்வழி வெண்பாவை அவர் எப்போதும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு உதாரணமாகச் சொல்வதுண்டு.
இன்று தமிழ் தாத்தா கந்த முருகேசனார் என்று கேட்டால், அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒரு சிலரையும் அவருடைய உறவினர்களையும் தவிர மற்றவர்கள் தெரியாது என்றே செல்வர்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சி மந்திகை பகுதியில் பருத்தித்தித்துறை யாழ்ப்பாணம் நெடுஞ்சாலை அருகே நிறுவப்பட்டள்ள அவரது சிலையும்,தென் புலோலியில் உபய கதிர்காமத்துக்கு அண்மையில் அவர் வாழ்ந்த வீடிருந்த பகுதிக்குச் செல்லும் கந்த முருகேசனார் வீதி என்ற பெயரும் தான் இன்று அவர் ஞாபகார்த்தமாக இருக்கின்றன.
ஏராளமான செய்யுள்களையும், இலக்கண நூல்களையும், தமிழர்; மெய்யியல் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதிய போதிலும் அவை எதுவுமே வெளியே வரவில்லை. அவரது பெயர் யாழ்ப்பாணப் புலவர் மரபிலிருந்து திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டதைப் போல அவரது எழுத்துக்களும் யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தின் கருத்தியல் வறுமைக்கு இரையாகிவிட்டன.
தமிழ் மக்களின் அறிவுக் கண்ணை திறப்பதற்காக அவர் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் மூன்று மாதங்கள் கல்வி கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து.
அந்த மூன்று மாதங்களில் அவர் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இப் போது 45 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் அதே வீச்சோடு என்னுள் ஆளமாகப் பதிந்திருக்கிறது.
அந்த அற்புதமான மனிதரை நான் சந்தித்த முதல் சந்திப்பே ஒரு சுவாரசியமான சந்திப்பாகும்.
அதாவது நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட 1962 ம் ஆண்டு மார்கழி மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை காலையில் எனது அம்மாவும் அப்பாவும் என்னை அந்த திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுவதற்காக அழைத்துச் சென்றனர்.
புது உடுப்பு, புதுச் செருப்பு, புதுச் சிலேட்டு, புதுப் பென்சில், புதிய பாலபோதினி 3 ம் வகுப்பு தமிழ் புத்தகம், புதுப் புத்தகப் பை என்று எல்லாமே புதிதாக கிடைத்த சந்தோசத்தோடு நான் அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு உற்சாகமாக நடந்து சென்றேன்.
எங்கள் வீட்டிலிருந்து அந்தப் பள்ளிக்கூடம் ஒரு அரை மைல் தூரத்திலேயே இருந்தது.எழுவாக்கை எனப்படும் வயல் வெளியின் வடக்குப் பக்கத்தினுடாகவே இந்தப் பள்ளிக் கூடத்துக்கு செல்ல வேண்டும். (வல்லிபுரக் கோவிலுக்கு இந்த வயல் வெளியின் கிழக்கப் பக்கமாகச் செல்லவேண்டும்.) நாங்கள் சென்ற போது சூரிய மேலே வந்துவிட்டதால் அதிகாலையில் அந்த வயல் வெளிக்கு அப்பால் உள்ள ஆனை விழுந்தான் வெளியில் பார்த்த கொள்ளிவால் பேய்களின் பயம் இப்போது இருக்கவில்லை.
ஆனால் ‘அந்த புதுப் பள்ளிக் கூடத்தில் வாங்கில்லை அல்லது கதிரையில இருந்து படிக்க விடுவார்களோ? என்ற ஏக்கமும் கதிர்காமர் வாத்தியாரைப் போல யாராது வாத்தியார் என்னுடைய புது உடுப்பை வாழைத் தடலாலை அடிச்சி ஊத்தையாக்கிப் போடுவாரோ?’ என்ற பயமுமே அப்போது இருந்தது.
நாங்கள் அந்தப் பள்ளிக் கூடத்தை அண்மித்த போது… ‘அறங்செய்ய விரும்பு’ ‘ஆறுவது சினம்’ ‘இயல்வது கரவேல்’ ஈவது விளக்கேல்’ என்ற ஒளவையாருடைய ஆத்தி சூடியையும் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’’ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்ற கொன்றை வேந்தனையும் அங்கு படிக்கின்ற பிள்ளைகள் உரத்த குரலில் கூட்டாகச் செல்வது காற்றில் மிதந்து வந்தது.
நாங்கள் அந்தப் பள்ளிக் கூடத்துக்காகச் சென்ற அந்த வீதியின் ஒரு திருப்பத்தில் மா மரங்கள் பால மரங்கள், தென்னை மரங்கள், பனை மரங்கள், கமுகு (பாக்கு) மரங்கள் வாழை மரங்கள் என்ற பல்வகை மரங்களும் செம்பரத்தை மணி வாழை ரோஜா மல்லிகை கனகாம்பரம் என்று நிறைய பூமரங்களும்; நிரம்பிய ஒரு சோலை இருந்தது. அந்தச் சோலையைத்தான் நான் படிக்கப் போகும் புதுப் பள்ளிக் கூடம் என்று எனது பெற்றொர் எனக்குக் காண்பித்தனர்.
‘பள்ளிக் கூடம் என்ற பெரிய கட்டிடங்கள் இருக்கும். கதிரை மேசைகள் இருக்கும்’என்று எண்ணிக்கொண்ட சென்ற எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
அந்தச் சோலையின் நடுவே ஒரு பெரிய மால் என்ற சொல்லுகின்ற ஒரு ஓலைக் கொட்டகையும் அதற்கு அருகே ஒரு சிறு குடிசையும் இருந்தன. ஆங்காங்கே உயரமாக வளாந்திருந்த மாமரம் பலா மரங்களுக்கு இடையே சிறு சிறு வட்டக் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்தக் குடில்களின் தரையில் கடற்கரை மணல் போடப்பட்டிருந்தது.அந்த மணலில் இருந்து தான் பிள்ளைகள் பாடம்படித்துக் கொண்டிருந்தார்கள். பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைப் பாத்தவுடன் என்னுடைய ஏமாற்றம் இன்னும் அதிகரித்தது.
‘சே! இந்தப்பள்ளிக் கூடத்திலையும் நிலத்தில் இருந்துதான் படிக்க வேண்டி இருக்கிறதே!’ என்று நான் சலித்தக்கொண்டேன். ஆனால் எல்லோருமே நிலத்தில் இருந்து படித்ததை பார்த்த போது நான் எற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மந்திகை பள்ளிக் கூடத்தை விட பறவாயில்லை என்ற திருப்தி ஏற்பட்டது.
இதேவேளை அந்தப் பள்ளிக் கூடம் இருந்த அந்த சோலைக் காணிக்குள் அங்காங்கே தடுப்பு வேலிகள் போடப்பட்ட பகுதிக்கள் நான்கு ஐந்து மான்களும் பல முயல்களும் மேயந்துகொண்டிருந்தன..
இன்னொரு புறத்திலே பல மயில்களும் ஏராளமான புறாக்களும் பஞ்சவர்ணக் கிளிகள் உட்பட பல வகையான கிளிகளும் இருந்தன. இந்த மான்களையும் மயில்களையும் பஞ்சவர்ணக் கிளிகளையும்; நான் அதுவரை பாலபோதினி பாடப்புத்தகத்தில் இருந்த படங்களில் தான் பார்த்திருக்கிறேன். அவற்றையெல்லாம் நேரில் பாhர்த்த போது எனக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. எனது பெற்றோர் அந்த மிருகங்களையும் பறவைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை அழைத்துக் கொண்டு அந்தச் சோலையின் நடுப்பகுதியில் இருந்த மாலை (பெரிய கொட்டகை) நோக்கிச் சென்றனர்.
அந்த மாலின் முன்பகுதியின் இரண்டு பக்கத்திலும் இரண்டு முளம் (ஏறக்கறைய ஒரு மீட்டர்) உயரத்தக்கு பெரிய விசாலமான மண்ணாலான திண்ணைகள் அமைக்கப்பட்டிருந்தன. வலது பக்க திண்ணையில் ஒரு பாய் விரிக்கப்பட்டு அதில் எராளமான ஏட்டுச் சுவடிகளும் பல புத்தகங்களும் வைக்கப்பட்டிருந்தன. இடது பக்கத் திண்ணையிலே மான் தோல் விரிக்கப்பட்டு அதன் மேல் தமிழ் தாத்தா என்று அழைகக்ப்பட்ட கந்த முருகேசனார் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.
நல்ல சிவந்த நிறம்.பஞ்சு போன்று வெள்ளையாக நரைத்த தலை மயிர். அதே நிறத்திலான நிண்டதாடி. இடுப்பில் மட்டும் நான்கு முள வேட்டி. நெற்றியல் தீருநீற்றுப் பூச்சு அகண்ட மர்பிலும் அடத்தியான சௌ;ளi முடி என்று அவரது தோற்றத்தையும் அவர் அமர்ந்திருந்த விதத்தையும் நான் முதல் முதலாக பார்த்த போது, ஒரு சில விநாடிகள் எனக்கு பயத்தில் நெஞ்சு அடைத்து, தொண்டைத் தண்ணிர் வற்றி, பேச்சோ அழுகையோ வராத ஒருவிதமான திகில் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
அம்மா எனக்கு அடிக்கடி கூறும் புராணக் கதைகளில் வரும் முனிவர்களுடைய ஞாபகம் தான் வந்தது. ‘புளிய மரத்தில் முனி இருக்கும், முனியடிக்கும் ஆட்களை கொண்டு பேயிடும்’ என்கின்ற கதைகளெல்லாம் எனக்கு அந்தக் கணத்தில் நினைவுக்கு வந்தது.
‘நான் குழப்படி செய்யிறதால அம்மாவும் அப்பாவும் பள்ளிக் கூடத்தக்கு என்று பொய் செல்லி முனியிட்டை பிடிச்சுக் கொடுக்கிறதுக்கு கூட்டிவந்திருக்கினம்’ என்று நினைத்து அம்மாவை கட்டிப் பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டுக் கதற ஆரம்பித்தேன்.
‘ஐயோ நான் இனி மேல் குழப்படி செய்ய மாட்டன். என்னை முனியிட்டை பிடிச்சுக் கொடுக்காதையுங்கோ. ஐயா..ஐயா (அப்பாவை நான் ஐயா என்று தான் கூப்பிடுவது வழக்கம்) அம்மாவிட்டை சொல்லணை. என்னை பிடிச்சசுக் குடுக்க வேண்டாம் எண்டு. நான் இனிமேல் குழப்படியே செய்யமாட்டன்’ என்று நான் கதறின கதறலால் அங்கே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பாடத்தை நிறுத்திவிட்டு எங்களையே பார்த்தார்கள்.
“அப்பன் அழாதையடா அவர் முனி இல்லை. அவர் பெரிய வாத்தியார் .அவர் மனிசன் தான் பயப்பிடாதை. ஐயாவும் அம்மாவும் உன்Nhடை கூட இருக்கிறம்’ என்று அம்மா என்னை சமாதானப் படுத்தி எனது பயத்தை தெளிய வைக்க முயற்சித்தா.
கந்த முருகேசனாருக்கு நான் ஏன் அப்படி கத்தி அழுகிறேன் என்பது புரிவில்லை. அவர் எனது அப்பாவிடமும் அம்மாவிடமும் அதற்கான காரணத்தை கேட்டுத் தெரிந்து கொண்டதும் “பேய் பிசாசு முனி என்று பிள்ளையை நல்லா பயப்பிடுத்திப் போட்டியள். இப்படிச் சின்ன வயதிலேயெ அதுகளை பயப்பபடுத்தினால் எப்படி அதுகளுக்கு தன்னம்பிக்கை வரும்?” என்று அவர் அவர்களை கடிந்து கொண்டார்.
அத்தோடு என்னை தூக்கி தான் அமர்ந்திருந்த திண்னையில் இருத்தும்படி அம்மாவுச் சொன்னார்.
‘நான் மாட்டன்.நான் மாட்டன் என்னை விடுங்கோ’ என்று நான் அம்மாவை இன்னும் இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டு கத்தி அடம்பிடிக்க அவர் தனது உதவியாளை அழைத்து எனது வயதுள்ள இரண்டு பொடியளை கூட்டி வந்து தனக்கு பக்கத்தில் இருத்தும்படி கட்டளையிட்டார்.
அவர்கள் வந்து இருந்ததும் ‘இப்ப பாத்தியே உன்னை போல பொடியள் அவருக்குப் பக்கத்தில இருக்கிறாங்கள்;. நீயும் பயப்பிடாமல் ஏறி இரு” என்ற அம்மா தைரியம் சொல்ல, நான் அவவை கட்டிப்பிடித்த பிடியை விடாமல் கழுத்தை திருப்பி அந்தப் பொடியளைப் பாத்தேன் . கொஞ்சம்; பயம் குறைந்தது.
அதை தெரிந்து கொண்ட அம்மா மெதுவாக என்னைத் தூக்கி அந்தத்திண்ணையில் இருத்தினா. அழுகை நின்றாலும் விம்மல் நிக்காத நிலையில், நான் அவவின் கையை பிடித்தக் கொண்டு தலையை குனிந்தவாறு அமர்ந்து கொண்டிருந்தேன். கந்த முருகேசனாரை நிமிர்ந்து பார்க்க எனக்கு தைரியம் வரவில்லை.
அவர் மொதுவாக எனது கையை பிடித்து இழுத்து என்னத் தூக்கி தனது மடியில் இருத்திக் கொண்டார். எனக்கு மறுபடியும் பயம் அதிகமாகிவிட்டது. விம்மி விம்மி அழுமை பீறிட்டு வரும் போல் இருந்து.
அவர் என்னை தடவி “பயப்பிடாத உன்ரை அப்பாவும் அம்மாவும் பக்;கத்தில் தான நிற்கினம். எதுக்கு பயப்பிட வேணும்” என்று சொல்லி ஆறுதல் படுத்தியதுடன், தான் சாப்பிடுவதற்கு வைத்திருந்த முந்திரிகைப் பழத்தை எடுத்து எனக்கு ஊட்டி விட்டார்.
ஏறக்குறைய 10 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்தச் சம்பவங்களை அங்கிருந்த ஆசிரியர்களும் மாணவர்களும் பாடம் படிப்பிப்பதையும் படிப்பதையும் விட்டு விட்டு பார்த்துக்கொண்டிருந்தனர்.
கந்த முருகேசனார் அவர்களை ஒரு அதட்டுஅதட்டி விட்டு என்னப் பார்த்து “சின்னப் பொடியனின் (எனது தந்தையின்; பெயர் அது) சின்னப் பொடியா! நாங்கள் பாடம் படிக்கலாமோ?” என்ற கேட்டார்.
அதற்கு நான் விம்மிக்கொண்டே சம்மதம் தெரிவித்து தலையாட்ட “உன்னுடைய பேரென்ன?” என்று அன்போடு திருப்பிக்கேட்டார்.
நான் “சிவ.. சிவன.. சிவநேச…மூர்த்தி என்று விம்மில் தடுக்க தடங்கித் தடங்கி பதில் சொன்னேன்.
“சிவநேசமூர்த்தி- சிவனுக்கு நேசமான மூர்த்தி அது யார் தெரியுமோ?” என்று அவர் திருப்பிக்கேட்க, நான் தெரியாதென தலையாட்டினேன்.
“தமிழ் கடவுளான முருகன். அவர்தான் சிவனுக்கு நேசமான மூர்த்தி என்று விளக்கமளித்த அவர் “சரி நான் இன்னொரு கேள்வி கேட்கப் போகிறேன் அதுக்கு பதில் சொல்லு பார்க்கலாம்” என்றார்.
அது என்ன கேள்வி என்று நான் அவரை நிமிர்ந்து பார்க்க, “உன்னுடைய பெயர் சிவநேசமூர்த்தி என்பது உனக்குத் தெரியும் ஆனால் நீ யார் என்பது உனக்குத் தெரியுமோ? நீ யார்? இதுக்கு பதில் சொல்லு பார்ப்போம்” என்றார்.
“அதற்கு விடை தெரியால் நான் யோசனை செய்ய “இன்றைக்கு முதல் நாள் இவ்வளவும் போதும் நாளைக்கு உன்னுடைய விட்டிலை இருக்கிற எல்லாரிடமும் கேட்டு அதற்கான விடையை தெரிந்து கொண்டு வா” என்று சொல்லி என்னை மடியில் இருந்து இறக்கிவிட்டார்.
அத்துடன் எனது பெற்றோருக்கு மீண்டும் “பிள்ளையளை ஒருநாளும் சாமி பூதம் பேய் பிசாசு முனி என்று சொல்லி பயப்பிடுத்தாதையுங்கோ” என்று அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.
நாங்கள் வெளியெ வந்தததும், கண்ட கண்ட புராணக் கதைகளை சொல்லி அம்மாதான் என்னை பயப்படுத்துவதாக அப்பா வழிக்கு வழி அவவை ஏசிக்கொண்டே வந்தார் .என்னுடைய சிந்தனை எல்லாம் ‘நான் யார்?’ என்பதை பற்றியே இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக