புதன், 17 ஜனவரி, 2007

நினைவழியா வடுக்கள்- 5

நினைவழியா வடுக்கள்- 5

நீ யார்? என்ற இந்தக் கேள்வி ஒரு மிகச் சிறிய கேள்வியாக இருந்த போதிலும் அதற்குரிய விடையை கண்டுபிடிப்பதென்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

என்னுடைய அம்மா ,அப்பா, அப்பு (தாத்தா) ஆச்சி (பாட்டி) உற்றார் உறவினர் யாருக்குமே இந்தக் கேள்விக்கான விடை தெரியவில்லை. அன்று இரவு வரை எனக்குத் தெரிந்தவர்கள் நண்பர்கள் என்று எல்லோரிடமும் இந்தக் கேள்வியை கேட்டுப் பார்த்துவிட்டேன். யாருக்கும் அதற்கு சரியான பதில் சொல்லத் தெரியவில்லை.

நீ யார்? என்றால், அதற்குரிய பதில் ‘நீ சிவநேசன் சின்னப்பொடியனின் மகன்’ என்றே எல்லோரும் கூறினார்கள். எனக்கு என்னவோ அந்தப் பதில் சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை.

இரவு பாயில் படுத்துக் கொண்டு உறக்கம் வராமல் இதைப்பற்றியே நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

உன்னுடைய பெயர் சிவநேசமூர்த்தி என்பது உனக்குத் தெரியும் ஆனால் நீ யாரென்றது உனக்குத் தெரியுமோ?’ என்று கந்த முருகேசனார் கேட்ட அந்தக் கேள்வியை திரும்பத் திரும்ப எனக்கு நானே கேட்டுப்பார்த்தேன்.

நான் சின்னப்பொடியனினதும் இலட்சுமியினதும் ஒரே மகன். எனக்கு எட்டு வயது ஆகிறது.நான் ஒரு மாணவன்.’ என்பதற்கு அப்பால் வேறெதையும் என்னால் கண்பிடிக்க முடியவில்லை.

மறுநான் காலையில் வழக்கம் போல அம்மாவுடன் வல்லிபுரக் கோவிலுக்குப் போய் மார்கழித் தோச்சலை முடித்துவிட்டு வந்து கந்த முருகேசனாருடைய பள்ளிக் கூடத்தக்கு புறப்பட்டேன். அன்று அப்பா தனது தொழிலுக்கு சென்று விட்டதால் அம்மா மட்டும் என்னோடு வந்தா.

நாங்கள் எழுவாக்கை வயல் வெளியைக் கடந்து தற்போது கந்த முருசேனார் வீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த வீதியால் சென்ற போது எங்களை கண்டவர்களும் கடந்து சென்றவர்களும் ஒருமாதிரியாக முறாய்த்துப் பார்த்துக் கொண்டு சென்றார்கள்.

நாங்கள் சென்ற அந்தப் பகுதி முழுக்க முழுக்க மேட்டுக் குடியினர் குடியிருக்கும் பகுதியாகும். பொதுவாக அந்தக்காலத்தில் (1955-65) நாங்கள் மேட்டுக் குடியினருடடைய குடியிருப்புக்களுடாக செல்லும் போது ஆண்கள் தோளில் துண்டோ சேட்டோ போடாமலும், பெண்கள் ஆடம்பரமாக உடையுடுத்தாமலும் செல்ல வேண்டும். மற்றப்படி சாதரணமாக உடை உடுத்திச் சென்றால் எங்களை யாரும் கணக்கில் எடுப்பதில்லை. அனால் அன்று எங்களை அவர்கள் பார்த்த பார்வையில் வித்தியாசம் தெரிந்தது. நான் புது உடுப்பும் புது செருப்பும் போட்டுக் கொண்டு போகின்றபடியினால் தான் அப்படிப் பார்க்கிறார்களோ? என்ற சந்தேகம் எனக்கு எற்பட்டது.

நாங்கள் பாடசாலையை நெருங்கிய போது வழக்கமாக காற்றில் மிதந்துவரும் பாடச் சத்தம் கேட்கவில்லை.அதற்குப் பதிலாக அந்தப் பாடசாலைச் சோலையிலிருந்த மாமரத்திலிருந்து இரண்டு குயில்கள் ஏட்டிக்குப் போட்டியாக கூவிக்கொண்டிருந்த சத்தம் மட்டுமே கேட்டது.

பாடசாலை வளவுக்குள் நாங்கள் நுழைந்து போது மாணவர்கள் யாருமின்றி அது வெறிச்சோடிப்போய் இருந்தது. ‘ஏன் என்ன நடந்தது பள்ளிக் கூடம் இல்லையா?’என்று நாங்கள் யோசித்தவாறு கந்த முருகேசனார் அமர்ந்தருக்கும் மாலை நோக்கிச் சென்றோம்.

தான் வழக்கமாக அமரும் இடத்திலிருந்து ஏட்டுச் சுவடி ஒன்றை படித்துக் கொண்டிருந்தவர். என்னைக் கட்டதும் ‘வா..வா..வா.. சின்னப்பொடியனின் சின்னப்பொடியா!’ என்று மகிழ்ச்சியோடு வரவேற்றார்.

“ஏன் நயினார் இன்டைக்கு பள்ளிக் கூடம் இல்லையோ? பொடியள் ஒண்டையும் காணேயில்லை?’ என்று அம்மா தயக்கத்துடன் கேட்க அவருக்கு அடக்க முடியாத கோபம் வந்து விட்டது..

உங்களுக்கு எத்தினை தரம் சொல்லுறது நயினார் எண்டு கூப்பிட்டு கூழைப் கும்பிடு போடாதையுங்கோ எண்டு.” என்று கத்தினார். அந்தக்காலத்தில் நாங்கள் மேட்டக்குடி ஆண்களை; ‘நயினார்’ என்ற சொல்லியும், பெண்களை ‘நச்சியார் என்ற சொல்லியும் தான் அழைக்க வேண்டும்.

அவருடைய கத்தலில் அம்மா பயந்து போய் ஒடுங்கி நிற்க…

ஏன் இண்டைக்கு பள்ளிக் கூடம் நடக்கேல்லை எண்டு உனக்குத் தெரியுமா?. உன்ரை மகனைத் நான் மடியில் தூக்கி இருத்திப் போட்டனாம். அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திட்டனாம். ஓரு நளப்பொடியனை கந்த முருகேசன் எப்பிடி மடியில இருத்தி பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ? என்று எங்கடை ஆக்கள் என்னைப் பார்த்து கேள்வி கேக்கினம்;. அதனாலை தங்கடை பிள்ளையளை என்னட்டை படிக்க அனுப்ப மாட்டினமாம். போராட்டம் நடத்துகினமாம் போராட்டம்’ என்று பெரிந்து தள்ளினார்.

அப்போது தான் வழியில் நாங்கள் சந்தித்த கனவான்கள் கூட்டம் எங்களை முறைத்துப் பார்த்த பார்வைக்கு எனக்கு அர்த்தம் புரிந்தது.

அம்மாவை வீட்டுக்கு திரும்பிப் போய் விட்டு மத்தியானம் வந்து என்னை கூட்டிச்செல்லும்படி கூறிய கந்த முருகேசனார், என்னை தனக்குப் பக்கத்தில் கூப்பிட்டு இருத்தி ‘நீ பயப்பிடாதை நான் உனக்கு படம் சொல்லித் தாறன். உவங்கள் ஆர் வந்தாலும் வராட்டிலும் நான் உனக்கு படிப்பிக்கிறன்’என்றார்.

அந்த வயதில் எனக்கு அவர் சொன்ன அந்தச் செல்லின் அர்த்தமும் தாக்கமும் புரியவில்லை.ஆனால் வளர்ந்து பெரியவனாகி எனக்கு விபரம் தெரிந்தபோது அதை நினைத்து ,அந்த மாமனிதனுடைய துணிவையும் தமிழ் பற்றையும் நினைத்து வியப்படைந்திருக்கிறேன். அவரிடம் கல்விகற்க சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமைப்பட்டிருக்கிறென்.

சைவமும் தமிழும் தமிழினத்தின் இரண்டு கண்கள்’ என்றும், ‘மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்’ என்றும் அந்தக்காலத்தில் பேச்சிலும் எழுத்திலும் கூறிவந்த யாழ்ப்பாணக் குடாநாட்டு அதிகார வர்க்கம், ‘சாதியம் என்பது மேன்மைகொள் சைவ நீதியின் பிரிக்க முடியாத ஒரு அம்சம்’ என்று நம்பியது.

நிலமும் கல்வியும் பட்டங்களும் பதவிகளும் சமூகத்தின் மீதான ஆளுமையும் தங்களுக்கு மட்டுமே உரித்தானவை என்றும் அவையெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்றும் இந்த அதிகார வர்க்கம் கதைவிட்டுக்கொண்டிருந்த போது, கந்த முருகேசனார் தன்னுடைய தமிழ் புலமையால் அதை மறுதலித்து மதம் கொண்ட யானை தன்னுடைய அழிவை தானே தேடிக்கொள்வதைப் போல மதம் பிடித்த தமிழனும் தன்னுடைய மதவெறியால் தன்னுடைய தலையில் தானே மண் அள்ளிப் போடுவான் என்று இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் துணிந்து சொல்லியிருந்தார்.

அன்று கந்த முருகேசனாருடைய பாடசாலையில் என்னைத் தனியே விட்டு;விட்டுச் செல்வதற்கு அம்மா தயங்கினா.நான் அழுது அடம்பிடிப்னோ என்ற பயத்தை விட சாதி வெறியர்கள் வந்து எனக்கு ஏதும் செய்துவிடுவார்களே என்ற பயமே அவவுக்கு அதிகமாக இருந்தது.

அதை அவ கந்த முருகேசனாரிடம் கூறியபோது “நான் இருக்கிறன் இங்கே ஒரு பயலும் வரமாட்டாங்கள் நீ பயப்பிடாமல் போயிட்டு வா” என்று கூறி அனுப்பி வைத்தார்.

அம்மா சென்றதும் என்னைக் கூர்ந்து பார்த்த கந்த முருகேசனார் “ நான் நேற்று உன்னிடம் ஒரு கேள்வி கேட்டனே… என்ன கேள்வி” என்று கேட்டார்.
“நீ யார்?” என்ற கேள்வி என்று நான் சொல்ல…

“அதுக்குப் பதில் தெரியுமா?” என்று அவர் திருப்பிக் கேட்டார்.

நான் தெரியும் என்றும் சொல்லமுடியாமல் தெரியாதென்றும் சொல்ல முடியாமல் தயங்க “எங்கே அதுக்கு பதில் சொல் பார்ப்போம்”; என்றார் அவர்.

“நான் சின்னப்பொடியனினதும் இலட்சுமியினதும் ஒரே மகன். எனக்கு எட்டு வயது ஆகிறது.நான் ஒரு மாணவன்” என்று தயங்கித் தயங்கி சொன்னேன்.

தனது கண்களை மூடி தனது வெண்தாடியை ஒரு நிமிடம் தடவிய அவர் தூரத்திலே புல் மேய்ந்து கொண்டிருந்த மானை காட்டி “அது என்ன? என்ற கேட்டார்.

நான் “மான்” என்று பதில் பதில் சொல்ல மயில்களைக் காட்டி “அது என்ன?” என்றார்.

நான் “மயில்” என்று சொல்ல “அப்ப நீ என்ன ?” என்று அவர் திருப்பிக்கேட்டார்.

அதற்கு உடனே பதில் சொல்லத் தெரியாமல் நான் தடுமாற … “அது மான் இது மயில் ….நீ…. மனிதன்” என்று ஒரு வித இராகத்தோடு உரத்து அழுத்திச் சொன்ன அவர்….

“சரி மனிதன் என்றால் என்ன?” என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

‘மிருகங்கள் ஐந்தறிவு உள்ளவை, மனிதன் ஆறறிவு உள்ளவன்’ என்று அம்மா எனக்கு ஏற்கனவே சொல்லித்தந்திருந்த படியால் “மனிதன் என்றால் ஆறறிவு உள்ளவன்” என்று நான் அவரது கேள்விக்கு துணிந்து பதில் சொன்னேன்.

எனது பதிலைக் கேட்டதும் தனது கண் புருவங்களை உயர்த்தி என்னை கூர்ந்து பார்த்த அவர் “ ஆறாவது அறிவு என்றால் என்ன?” என்று கேட்டார்.
அதற்குரிய பதிலும் எற்கனவே எனக்குத் தெரிந்திருந்த படியால் “பகுத்தறிவு” என்று சொன்னேன்.

“பகுத்தறிவு என்றால் என்ன?” அவர் திருப்பக் கேட்க எனக்கு சரியான பதில் சொல்லத் தெரியவில்லை.

பகுத்தறிவு என்றால் பகுத்து அறிவது .‘சரி பிழை -, நன்மை தீமை -நல்லது கெட்டது’ என்று எல்லாவற்றiயும் சீர்தூக்கிப்பார்த்து சரியான முடிவுக்கு வாறது.” என்று அவரே அதற்கு விளக்கம் சொன்னதுடன் “இங்கை இந்த இந்த மான்களை பார், மயில்களைப் பார், புறாக்களைப் பார் , கிளியளைப் பார் இதுகளுக்கு பகுத்தறிவு இல்லை எண்டு நாங்கள் சொல்லுறம்;. அதுகள் தங்களுக்குள் எவ்வளவு ஒற்றுமையா இருக்குதுகள்.ஆனால் பகுத்தறிவு இருக்கிறதா சொல்லிக் கொள்ளுற நாங்கள் சாதி சமயம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் எண்டு சொல்லிக்கொண்டு ஒருதரை ஒருதரை உயர்த்தி தாழ்த்தி சண்டைபிடிச்சுக் கொண்டிருக்கிறம்.” என்று கூறி ஒரு பெருமூச்சுவிட்டார்.

மனிதன் என்றால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தவேண்டும். அவன்ரை மனதிலை கருணையும் இரக்கமும் இருக்க வேண்டும்.மற்றவைக்கு உதவி செய்ய வேணும் எண்ட குறிக்கோள் இருக்க வேணும். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவன் தான் உண்மையான மனிதன். தியாகம் செய்கிறது தான் உண்மையான மனித குணம்.” என்று அவர் அன்று சொன்ன அந்த வார்த்தைகள் இன்றும் என் மனதில் ஆளமாக பதிந்திருக்கிறது.

முதலில் நீ மனிதன். அடுத்து தமிழன். அடுத்து சின்னப் பொடியன் இலட்சுமியின் மகன். இது தான் உன்னுடைய அடையாளம். இது தான் ‘நீ யார்?’ என்ற அந்தக் கேள்விக்குரிய முழுமையான விடை” என்று அவர் விளக்கமாகச் சொன்னதும் நான் அதை மனதுக்குள் திரும்பச் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தேன்.;

நீ மனிதன் எண்டது உனக்குத் தெரியும். அடுத்தது தமிழன். தமிழன்; எண்டால் என்னண்டு தெரியுமோ? ஏன் நீ தமிழன்? இதுக்கு பதில் சொல்லு பார்ப்போம்” என்று அவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

நான் கொஞ்சநேரம்; அதைப் பற்றி யோசித்துப் பார்த்து விட்டு “ தமிழ் கதைக்கிற படியால் நான் தமிழன்” என்று பதில் சொன்னேன்.

“இங்கே தமிழ் ஆக்கள் கொஞ்சப் பேர் இங்கிலிஸ் கதைக்கினம். அப்ப அவை இங்கிலிஸ்காரரா?” என்று அவர் எதிர் கேள்வி கேட்டார்.

எனக்கு குழப்பமாகப் போய்விட்டது. என்ன பதில் சொல்வதென்றே தெரிய வில்லை. நான் அப்பாவித் தனமாக அவரது முகத்தை பார்க்க….

அவர் “நல்லா யோசிச்சுப்பார் உன்ரை அப்பாவிட்டையும் அம்மாவிட்டையும் போய் கேட்டு நாளைக்கு எனக்கு வந்த பதில் சொல்லு” என்றார்.

நான் “சரி” என்று தலையாட்டியதும் ….

அடுத்தது “நீ சின்னப்பொடியன்ரையும் இலட்சுமியின்ரையும் மகன் . சரி அவை இரண்டு பேரும் ஆருடைய பிள்ளையள்? அவையைப் பற்றி தெரியுமோ?” என்று கேட்டார்.

எனக்கு ஏற்கனவே அந்த விபரம் தெரிந்த படியால் “அப்புச்சிக்கு(அப்பப்பா) பெயர் வினாசி.அப்பாச்சி (அப்பம்மா) க்கு பெயர் சின்னாச்சி. அப்புக்கு (அம்மப்பா) பெயர் கணபதி ,ஆத்தை (அம்மம்மா)க்கு பெயர் வள்ளி” என்று உடனே சொன்னேன்.

“சரி உனக்கு அவையின்ரை அப்பா அம்மா ஆரெண்டு தெரியுமோ? என்று அடுத்த கேள்வி வந்தது. உண்மையில் அவர்களைப் பற்றிய விபரம் எனக்கு அப்போது தெரியாது.

அதை புரிந்து கொண்ட கந்த முருகேசனார்; ‘அவை யார்?; எங்கே இருந்தவை. அவை என்ன செய்தவை? இப்ப எங்கை இருக்கினம் என்ற விபரங்களை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு மறுநாள் தனக்கு வந்த சொல்ல வேண்டும் என்றும் சென்னார்.

அன்று அத்துடன் படிப்பு முடிந்துவிட்டது. அம்மா வரும் வரை என்னை அங்கிருந்த மான்கள் மயில்கள் கிளிகள் எல்லாவற்றையும் சுற்றிப்பாக்கும்படி சொன்னார்.

எற்கனவே மந்திகைப் பள்ளிக் கூடத்தில் கதிர்காமர் வாத்தியாரிடம் பேச்சுவாங்கி அடிவாங்கி அவமானப்பட்டு அழுதுகொண்டு படித்தவந்த எனக்கு கந்த முருகேசனாரின் அனுகு முறையும் ஆவர் பாடம் சொல்லித் தந்த விதமும் எனக்கு மிகவும் பிடித்தவிட்டது. நிறைய தெரிந்து கொள்ளவேண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அது தூண்டியது.

கருத்துகள் இல்லை: