நினைவழியா வடுக்கள்-6
அன்று வீட்டுக்கு சென்றதும் முதல் வேலையாக எனது குடும்ப வரலாற்றை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டேன்.
அப்போது அதாவது 1962ம் ஆண்டு எங்களுடைய வீட்டில் ,அப்பா அம்மா ,ஆச்சி (அம்மம்மா) அப்பு (அம்மப்பா) ஆகியோர் மட்டுமே இருந்தோம்.
இதில் அப்பாவுக்கு என்னுடன் ஆறுதலாக இருந்து கதைப்பதற்கு உண்மையில் நேரம் இருப்பதில்லை. சீவல் தொழில் செய்து வந்த அவர் காலையில் 7 மணிக்கு தொழிலை ஆரம்பித்தால் இரவு 8 மணிக்குத்தான் அதை முடிப்பார்.இடையில் மதியம் ஒரு இரண்டு மணி நேரம் சாப்பாட்டுக்கென ஓய்வெடுப்பார்.வாரத்தில் ஏழு நாட்களும் தொழில் செய்யும் அவர் வீட்டுக்கு வரும்போது மிகவும் களைத்துப்போய் வருவார். அதனால் நான் அவரை தொந்தரவு செய்ய விரும்பவதில்லை.
அம்மாவோ அப்பா இறக்கும் கருப்பணியை (பதனீரை) அவர் தொழில் செய்யும் இடத்துக்குச் சென்று வாங்கி வந்து காச்சி பனங்கட்டி செய்யும் வேலையில் ஈடுபடுவா. ஆச்ச்pயும் அவவுக்கு உதவி புரிவா. அவர்கள் இருவரும் எப்போதும் ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். எனவே அவர்களிடமும் ஆற அமர இருந்து என்னால் கதைக்க முடிவதில்லை.
அப்பு மட்டுந்தான் நான் தெரிந்துகொள்ள விரும்பும் விடயத்தை செல்வதற்குரிய ஆளாக இருந்தார். அப்போது அவருக்கு 68 வயது. 1894 ம் ஆண்டு பிறந்த அவர் ‘போல்’ என்று என்ற அழைக்கப்படும் வெள்ளைக்கார பாதிரியார் ஒருவரின் உதவியால் அந்தக் காலத்திலேயே 6 ம் வகுப்புவரை படித்திருக்கிறார். எங்களுடைய உறவினர்களில் அவர் ஒருவர் அதிகமாகப் படித்திருந்தார்.
சிறந்த பாடகரான அவர்; நல்ல நாடக நடிகரும் கூட. ஸ்ரீவள்ளி பவளக்கொடி சத்தியவான் சாவித்திரி முதலாக பல நாடகங்களில் நாரதர் வேடத்தில் தோன்றி நடித்திருக்கிறார்.
தனக்குத் தெரிந்த தன்னோடு சம்பந்தப்பட்ட பல சம்பவங்களை அவர் ஏற்கனவே எனக்குச் சொல்லி இருக்கிறார்.
அதனால் அன்று மாலை எங்கள் வீட்டு முற்றத்தில் இருந்த வேப்ப மரத்தின் கீழிருந்து சுங்கான் குடித்துக்கொண்டிருந்த அவரிடம் சென்று கந்த முருகேசனார்; கூறியதை சொன்னென்.
உடனே சுங்கானை அணைத்து விட்டு என்னைத் தூக்கி தனது மடியில் இருத்திக் கொண்டு எங்களது குடும்ப வரலாற்றை அவர் ஒரு சுவாரசியமான கதையாக சொல்ல ஆரம்பித்தார்.
1920 ம் ஆண்டு வரையில் எங்களுக்கு சொந்த நிலம் என்பது இருக்கவில்லை. நாங்கள் குடியிருந்த நிலமும் எங்களுக்கென்று இருந்த வயல் நிலங்களும் வல்லிபுரக் கோவிலுக்கு சொந்தமானதாக இருந்தது. அதுவரை நிலம் வாங்கும் உரிமை எங்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது.
அந்தக்காலத்தில் வல்லிபுரக்குறிச்சி மற்றும் கொத்தியவத்தை என்று தனித்தனியாக அழைக்கப்பட்டு தற்போது ‘சிங்கைநகர்’ என்ற ஒரே பெயரால் அழைக்கப்படும் எங்கள் ஊரில் 1900 ம் ஆண்டு எடுத்த கணக்கின்படி 38 குடும்பங்கள் மட்டும் இருந்தன.
இதில் எங்களது குடும்பம் உட்பட 24 குடும்பங்கள் புலோலியைச் சேர்ந்த வெள்ளாhளர்களினதும், ஏனைய 14 குடும்பங்கள் துன்னாலைச் சேர்ந்த வெள்ளார்களினதும் குடிமைகளாக இருந்தன.
கந்தன், கணபதி, முருகன், வேலன், வினாசி, சின்னப்பொடியன் சின்னான் ஆகிய பெயர்களைத் தான் நாங்கள் வைக்க முடியும். பெண்கள் என்றால் வள்ளி, பாறி, சின்னாச்சி, சின்னம்மா ஆகிய பெயர்களைத் தான் வைக்கலாம். 1957 ம் ஆண்டு சிறிலங்கா நாடளுமன்றத்தில் சமூகக் குறைபாடுகள் சட்டம் கொண்டுவரப்படும் வரை இந்த முறைதான் இருந்தது.
என்னுடைய அப்பாவின் பெயர் சின்னப்பொடியன் என்றால் அவருடைய தாத்தாவின் பெயர் சின்னப்பெடியன் தான். என்னுடைய அப்புவின் பெயர் கணபதி. அவருடைய தாத்தாவின் பெயரும் அந்தத் தாத்தாவினுடைய தாத்தாவின் பெரும் கணபதி என்றே இருந்தது. குடும்பப் பெயரை தொடர்ந்து வைப்பதென்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருந்திருந்தால்;அது வரவேற்கத் தக்கதாக இருந்திருக்கும்.
ஆனால் யாழ்ப்பாண சமூகத்தில் சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட எமக்கு பெயர் வைப்பது கூட அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. தன்னுடைய பிள்ளைக்கு பெயர் வைக்கும் உரிமை கூட எங்களது சமூகத்துக்கு மறுக்கப்பட்டிருந்தது. எங்களுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதை ஆரம்பத்தில் விதானை என்ற கிராமத் தலைவரும் பின்வந்த காலத்தில் றிஜிஸ்தர் எனப்படும் பிறப்பு இறப்பு பதிவாளர்களும் தான் தீர்மானித்தனர். இந்தப் பெயர்கள் அடிமை-குடிமை முறையின் குறியீடுகளாக இருந்தன.
1967-68 ம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்த சாதியத்துக்கு எதிரான போராட்டம் உச்சமடைந்திருந்த நேரத்தில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்குள் செல்வதற்கான ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்தது.இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு யாழ்ப்பாண அதிகார வர்க்கம் தங்களது குண்டர் படைக்கு துணையாக சிறீலங்கா காவல்துறையையும் சட்டத்துறையையும் பயன்படுத்திக் கொண்டது.
இந்த காலகட்டத்திலே ‘கந்தன் கருணை என்ற புகழ் பெற்ற சமூக சீர் திருத்த நாடகம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல் வேறு இடங்களில் மேடையேற்றப்பட்டது.
இந்த நாடகத்திலே ஒரு காட்சி…..
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்குள் சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள் செல்வதை தடுப்பதற்காக கோவிலைச் சுற்றி சிறீலங்கா காவல்துறையினரின் காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேவலோகத்திலிருந்து முருகன் அங்கே என்ன நடக்கிறது என்பதை பார்க்க வருகிறார். சிறீலங்கா அரச காவலர்கள் அவரை தடுத்த நிறுத்தி ‘உனது பெயர் என்ன’ என்று கேட்கிறார்கள்.
அவர் ‘என் பெயர் கந்தன்’ என்கிறார்.“ஓ கந்தன். அப்படியென்றால் நீ சாதி குறைந்தவன். அதனால் நீ கோவிலுக்குள் செல்லமுடியாது” என்று கூறி சிறீலங்கா காவலர்கள் அவரை தடுக்கின்றனர்.
“என்ன அநியாயம் இது. நான் குடியிருக்கும் என்னுடைய வீட்டுக்குள் நான் செல்வதற்கு தடையா?” என்று முருகன் அவர்களுடன் வாக்குவாதப்படுகிறார்.
“அவர்களோ முருகன் வேஷம் போட்டுக் கொண்டு வந்து எங்களை ஏமாற்றுகிறாயா?” என்று அவரை அடித்து விரட்டுகின்றார்கள்…..
அந்தக் காலத்தில் பெயர் என்பது சாதிய ஒடுக்குமுறையின் குறியீடாக இருந்தது என்பதை இந்த நாடகக் காட்சி சித்தரித்தது.
என்னுடைய அப்பு அறியத் தக்கதாக எங்களுடைய ஊரில் 30 பேருக்கு கணபதி என்று பெயர் வைக்கப்பட்டிருந்ததது. இந்தக் கணபதிகள் ஒருவரை ஒருவர் வேறுபடுத்துவதற்கு பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டன.எனது அப்புவுக்கு தலை கொஞ்சம் பெரிது என்ற படியால் அவர் மண்டைக் கணபதி என்று அழைக்கப்பட்டார்.இன்னொருவர் பாணை விரும்பிச் சாப்பிட்டதால் பாண்கட்டைக் கணபதி என்று அழைக்கப்பட்டார்.
1914 ம் ஆண்டு முதலாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகிய போது பருத்தித்துறை முறைமுகத்தின் பாதுகாப்புக்கென பிரித்தானியப் படையணி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்தப் படையணியின் அடிமட்ட வேலைகளை செய்வதற்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதிகார வாக்கத்தை சேர்ந்தவர்கள் அத்தகைய வேலைகளுக்கு செல்ல மறுத்தவிட்ட நிலையில் அவர்களின் குடிமைகளாக இருந்த எமது முன்னோர்கள் கட்டாயப் படுத்தி அழைத்துச் செல்லப்பட்டனர்.
எங்களது ஊரில் இருந்து மட்டும் எனது அப்பு அவரது தந்தை கந்தன் எனது அப்பாவின் அப்பா வினாசி அவரது தந்தை சின்னப்பொடியன் உட்பட 45 பேர் இவ்வாறு பிரித்தானிய படையினருக்கு சேவகம் செய்ய கொண்டு செல்லப்பட்டனர்.
1919 ம் ஆண்டு ஆரம்பம் வரை ஏறக்குறைய ஐந்தரை வருடகாலம் வேலை செய்ததற்காக ஒரு வருடத்துக்கு 12 ரூபா வீதம் அவர்களுக்கு 66 ரூபா சம்பளம் கொடுக்கப்பட்டது.அந்த காலகட்டத்தில் எங்களுடைய முன்னோர்களுக்கு இது ஒரு பெரிய தொகையாக இருந்தது.; அ’துவரை தான் அவ்வளவு பெரிய தொகையை பார்த்ததே இல்லை’ என்று அப்பு என்னிடம் கூறினார்.
அந்தக்காலகட்டத்தில் பருத்தித்துறை பிரதேசத்திற்கான கிறீஸ்தவ மத பங்குத் தந்தையாக இருந்த போல் என்பவர் (அவருடைய முழுப்பெயர் தெரியவில்லை) எங்களுடைய கிராமத்துக்கு அடிக்கடி சென்று நிறைய உதவிகளை செய்திருக்கிறார். எனது அப்பு உட்பட எங்கள் கிராமத்தைச் சேர்ந்த 6 பேரை அவர்களின் ஆண்டைகளாக இருந்த வெள்ளாளர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாது பருத்தித்துறை நகரத்தில் தான் நடத்திவந்த பள்ளிக் கூடத்தில் சேர்த்து படிப்பித்திருக்கிறார்.
முதலாம் உலக மகாயுத்தக் காலகட்டத்தில் எம்மவர்கள் வேலை செய்யும் இடத்துக்குச் சென்று அவர் மதப் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள். இதனால் அங்கு வேலை செய்த அடித்தட்டு மக்களுக்கும் அவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகமாகியது. அவருடைய நோக்கம் எம்மவர்களை மதம் மாற்றுவதாக இருந்தாலும் அந்த முயற்சியில் அவர் பல நல்ல செயல்களைச் செய்திருக்கின்றார்.
குடிமை முறையின் கொடூரங்கள் அதனால் எங்களுடைய மக்கள் அனுபவிக்கும் அவலங்கள் மற்றும் கல்வியறிவின்மை என்பவற்றைப் பற்றியெல்லாம் அவர் பிரித்தானிய அரசுக்கு எழுதிய கடிதத்தின் பயனாக 1919ம் ஆண்டு சட்ட ரீதியாக குடிமை முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
கட்டாயக் கல்வியும் நிலம் வாங்கும் உரிமையும் எங்களுக்கு வழங்கப்பட்டன. நாங்கள் பரம்பரை பரம்பரையாக குடியிருந்த நிலத்தை எங்களுக்கு வழங்க ஆண்டைகள் மறுத்த போது போல் பாதிரியார் அதை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து அந்த நிலங்கள் எங்களுக்கு கிடைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்.
போல் பாதியார், விபுலானந்த அடிகள் ஹன்றி பேரின்பநாயகம் முதலால மனிதாபிமானம் மிக்க பல மனிதர்கள் விடுத்த வேண்டுகோள்களின் பேரில் அன்றைய இலங்கையின் பிரித்தானிய காலணித்துவ நாடாளுமன்றத்தில் அனைத்து மக்களுக்குமான வாக்குரிமை,குடிமை முறை ஒழிப்பு சமத்துவமான கல்வி என்ற பல நல்ல திட்டங்கள் முன் வைக்கப்பட்ட போது யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகளாக அந்த நாடாளுமன்றத்தில் வீற்றிருந்த இராமநாதன் கும்பல் அவற்றை எதிர்த்தது கேவலமான வரலாறாகும்.
முதலாம் உலக மகா யுத்தம் முடிந்த பின்பு இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் முற்போக்கான சித்தனை கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தின் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரங்கள், மகாத்மா காந்தியின் குடாநாட்டு வருகை(1926) என்பன எங்களது சமூகத்திற்கு எழுச்சியை கொடுத்திருந்தன.
எங்களுடைய மக்களுக்கு நிலத்தின் மீதான உடமை(இது என்னடைய நிலம்) சட்டபூர்வமாக வழங்கப்படதென்பது கடுமையான உழைப்பாளிகளான அவர்களை முன்னேற்றப் பாதையை நோக்கி உந்தித் தள்ளியது. குடிமை முறையின் ஒழிப்பு பலரை யாழ்ப்பாணம், திருகோணமலை முதலான நகரங்களுக்குச் சென்று தொழில் புரியத் தூண்டியது.
என்னுடைய அப்பு 1921ம் ஆண்டு யாழ்ப்பாண நகரத்துக்கச் சென்று கிறிஸ்தவ மிசனறிமாரால் நடத்தப்பட்ட வெதுப்பகம் (பேக்கரி) ஒன்றில் 5 வருடங்கள் வேலை செய்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் அவர் சைக்கில் ஓடக் கற்றுக்கொண்டு 10 ரூபாவுக்கு ஒரு புதுச் சைக்கிலை வாங்கி ஒடிக்கொண்டு ஊருக்கு வந்தபோது எங்களுர் ஆண்டைகள் அவரை கொலை வெறியுடன் பாத்திருக்கிறார்கள்.
எங்களுடைய ஊரில் மட்டுமல்ல எங்களுடைய ஆண்டைகளுடைய ஊரிலும் முதல் முதலாக சொந்தச் சைக்கில் வைத்திருந்த நபராக அவர் இருந்தார். அவரது புது சைக்கில், அதை அவர் வாங்கிய ஒருவார காலத்தக்குள் எங்களுர் அதிகார வர்க்கக் குண்டர்களால் கோடாலியால் கொத்தி உடைக்கப்பட்டுவிட்டது. அப்புவினுடைய காலையும் அவர்கள் அடித்து முறித்துவிட்டனர்.
1920க்குப் பின்னர் பெருளாதார ரீதியாக எங்களுடைய சமூகம் அடைந்து வந்த முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தாது விட்டால் தங்களது சமூக மேலாண்மை பாதிக்கப்பட்டுவிடும் என்ற அஞ்சிய குடாநாட்டு அதிகார வர்க்கம் தனது அதிகார பலத்தை மட்டுமல்லாது மூளை பலத்தையும் பாவித்தது.
ஆறுமுகநாவலர் பரம்பரையினால் நிறுவப்பட்ட சைவப்பிரகாச வித்தியாசாலைகளில் எமக்கு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டுவந்த நிலையிலும் அரசாங்கப் பாடசாலைகளில் அதிகாரவர்க்க ஆசிரியர்களால் நாங்கள் கல்வியில் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையிலும் 1914 ம் ஆண்டு அல்வாய் பகுதியிலுள்ள வதிரிக்கிராமத்தில் வேலிர் சோதிடர், கா.சூரன் ஆசாரி ஆகிய இருவரும் இணைந்து எங்களுக்கென்று ஒருபாடசாலையை உருவாக்கியிருந்தனர்.
அந்தப்பாடசாலையை பதிவு செய்யக் கூடாது என்று குடாநாட்டு அதிகார வாக்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த நெருக்குதல்களை புறந்தள்ளிய பிரித்தானிய ஆட்சியாளர்கள் 1920 ம் ஆண்டு வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி என்ற சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்கியிருந்தனர்.
இந்தப் பாடசாலை உருவாகுவதை எதிர்த்த எவரும் ‘ஒரு சமூகத்தினருக்கு என்ற அடிப்படையில் ஒரு பாடசாலை அமைவது தவறு’ என்ற கூறி எதிர்க்கவில்லை. மாறாக ‘சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர். தங்களுக்கென்று பாடசாலைகளை உருவாக்குவது தேசவழமைக்கு எதிரானது’ என்று கூறியே எதிர்த்தார்கள்.
சட்ட ரீதியாக தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் முழுமையான வெற்றிகளை பெற முடியாதிருந்த அவர்கள் எங்களை வைத்தே எங்களை அழிக்கும் தந்திரோபாயத்தை கைக் கொள்ள ஆரம்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக