திங்கள், 16 மே, 2011

புதிய அரசு: மக்கள் எதிர்பார்ப்பு என்ன?-

தமிழக மக்கள் அளித்த தீர்க்கமான முடிவால் பதவியேற்கவுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் புதிய ஆட்சியில், பொதுமக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். ஐந்து விஷயங்களில், இந்த அரசு உடன் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அவை: 1.ஊழலை ஒழித்தல், 2.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், 3.நிர்வாகச் சீர்கேடுகளை ஒழுங்குபடுத்துதல், 4.அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல். 5.அனாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துதல்.


கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், சர்வதேசத் தர நூலகம், சாலைகள், பூங்காக்கள், பாலங்களுக்கான திட்டங்கள், கடந்த தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. ஒரு ரூபாய்க்கு அரிசி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. ஆனால், சென்னையில் 10 தொகுதிகளில் ஒன்றை மட்டுமே வென்று, ஒன்பதை தி.மு.க., இழந்ததைப் பார்க்கும்போது, இவற்றையெல்லாம் மக்கள், அரசின் சாதனைகளாகக் கருதவில்லை. ஓர் அரசின் கடமையாகவே பார்த்தனர் என்பது தெரிகிறது.தவிர, அரசு சாதனைகளாகக் கூறிய விஷயத்தின் மறுபக்கத்தையும், மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். (உபயம் - இலவச கலர் "டிவி') எவ்வளவு கோடி ஊழல் நடந்தது. குடும்ப சாதனைகளாகக் கருதவில்லை. ஓர் அரசின் கடமையாகவே பார்த்தனர் என்பது தெரிகிறது.


சாதாரண சைக்கிளில் சென்ற கவுன்சிலர்கள் கூட ஒயிட் சுமோவிலும், ஸ்கார்பியோவிலும் ஆடம்பரமாக செல்லும் வசதி திடீரென எப்படி ஏற்பட்டது. எந்த திட்டங்களில் அவர்கள் பயன் அடைந்தனர் என்று நினைத்தனரே தவிர, அவற்றையெல்லாம் அரசின் சாதனைகளாகக் கருதவில்லை.புதிதாத முதல்வர் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதா, ஊழலை முழுமையாக ஒழிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்காக முந்தைய ஆட்சியில் இருந்தவர்களை கோர்ட்டுக்கு இழுக்க வேண்டும் என்பதில்லை. எத்தனை சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும் உடனடியாக தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது என்பது நாம் அறிந்ததே. ஆகவே, அதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இனி தமிழகத்தை எப்படி முதலிடத்தில் கொண்டு வரலாம் என்பதில் கவனம் செலுத்துவதே சிறந்தது.


கடந்த ஆட்சியில், ஓய்வு பெற்ற பின்னரும் உயர் அதிகாரிகள் முக்கிய பொறுப்பில் இருந்தனர். அவர்களை முழுமையாக இந்த அரசு ஒதுக்கிவிட வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நேர்மையான, துடிப்பு மிகுந்த இளம் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்க வேண்டும்.வெள்ளைக்காரர்கள் வகுத்த நிர்வாக நடைமுறையின்படி, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதவியில்லாமல், எந்த அரசியல்வாதியும் பணம் எடுக்க முடியாது. இன்றும் இதுதான் நிலை. உயர் அதிகாரிகள் மட்டத்தில் பொறுப்புணர்வும், கடமையைச் செய்ய வேண்டும் என்ற உணர்வும், தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயமும் இருந்தால்தான், திட்டங்கள் சரியாக நடக்கும்.


சுயநலம் பார்க்காத, திறமை உள்ள அதிகாரிகள் ஊக்குவிக்கப்படுவர் என்ற நம்பிக்கையும், எதிர்ப்பு வந்தால் அரசால் பாதுகாக்கப்படுவோம் என்ற தைரியமும் இருந்தால், தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர் முன்வருவர் என்பதை புதிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.எந்த வேலை என்றாலும், அரசு அதிகாரிகளை பார்த்தால்தான் முடியும் என்ற நிலை தான் ஊழல் அதிகரிக்க காரணம். இந்நிலை மாற வேண்டும். நிர்வாக சீர்த்திருத்தங்களுக்கான பரிந்துரை அமல் செய்ய வேண்டும். ஒரு தனி அதிகாரி கையில் அதிகாரங்கள் குவிந்திருக்கக் கூடாது. அனுமதி, அங்கீகாரம் வழங்கும் முறைகள், ஒற்றைச் சாளர முறையில் நடக்க வேண்டும்.நாடு வளர்ச்சி அடைய, அரசு நிர்வாகம் செய்ய வேண்டுமே தவிர, தனியாரிடம் போட்டிப் போட்டுக் கொண்டு அரசு தொழில் செய்யக் கூடாது என்ற எண்ணம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன், தனியார் முதலீடு இல்லாத காலத்தில், அரசே எல்லாவற்றையும் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இன்று, தனியார்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றனர். அனைத்து தொழில்களுக்குமான அடிப்படைத் திட்டங்களுக்கும் தனியார் முதலீடு செய்யலாமே தவிர, இதையும் அரசே நடத்தலாம் என்ற நிலையை முதலில் நிறுத்த வேண்டும். தற்போது இருக்கும் பல அரசுத் துறைகளில் படிப்படியாக தனியாரின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும்.


நேர்மையான, அரசின் தலையீடு இல்லாத திட்டங்களை வகுத்துக் கொடுத்தால், அனைத்துத் துறைகளிலும் தனியார்கள் முதலீடு செய்யத் தயாராக இருக்கின்றனர். 20 ஆண்டுக்களுக்கு முன், தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்தின் நிலையை எண்ணிப் பாருங்கள். இன்று, இத்துறைகளின் அபார வளர்ச்சியையும் எண்ணிப் பாருங்கள். இந்த வளர்ச்சிக்கு அரசு எடுத்த தாராளமயமாக்கல் கொள்கைதானே. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான "டிராய்' போன்றுதான் பல அரசு அமைப்புகள், தொழில்களை கண்காணிக்கும் ஏஜன்சிகளாக செயல்பட வேண்டும். பஸ் நடத்துவது, டூரிஸ்ட் லாட்ஜ் நடத்துவது அரசின் வேலையல்ல.


தி.மு.க., அரசு பெரிய தொழிற்சாலைகளை ஊக்குவித்ததே தவிர, அரசு நிர்வாக சீர்கேட்டை மாற்ற முயற்சி செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் அரசு அதிகாரிகளை சந்திக்கும் வகையில்தான் தி.மு.க., அரசின் திட்டங்கள் செயல்பட்டன. ஏதாவது ஒரு வகையில், அரசு அதிகாரிகள் வருமானம் பெற்றால், அவர்கள் தி.மு.க., அரசின் மீது விசுவாசமாக இருப்பார்கள் என்று எண்ணினரே தவிர, நிர்வாக சீர்த்திருத்த முயற்சிகளை எடுக்கவில்லை. தொலைத்தொடர்பு, போக்குவரத்துத் தொழில் போல், மின் உற்பத்தித் திட்டங்களுக்கும் தனியாரை ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும். அனல் மின் நிலையமாக இருந்தாலும் சரி, மரபுசாரா மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, தனியாரை ஊக்குவிக்கும் தனித் திட்டங்களை புதிய அரசு வகுக்க வேண்டியது அவசியம்.


சில அமைச்சர்கள் அரசியல் ரீதியாக திறமையானவர்களாக இருந்தாலும் - நிர்வாக ரீதியாக அனுபவம் இல்லை.கடந்த 30 ஆண்டுகளில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் பெயர் சொல்லும் அளவுக்கு எந்த அமைச்சரும் இருக்கவில்லை. தமிழகத்தில் திறமையான அமைச்சர் யார் எனக் கேட்டால் சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன் என்று தான் கூறுகின்றனரே தவிர, நெடுஞ்செழியனோ, ஆற்காடு வீராசாமியோ, அன்பழகனோ என்று சொல்வதில்லை.


இந்நிலை மாற, தொழிலில் சாதித்தவர்களின் திறமையை இந்த அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி., ஆனால் தான் அமைச்சராக முடியும் என்ற நிலை இருப்பதால், அமைச்சருடன் நிர்வாகத் திறமை உள்ள நிபுணர் குழுவை அமைத்து, திட்டங்கள் வகுக்க வேண்டும். சட்ட ரீதியாக பொறுப்பும், அதிகாரமும் இக்குழுவிற்கு வழங்க வேண்டும். அப்போதுதான் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கமிட்டியில் அமைக்கும் பாணி முடிவுக்கு வரும். பதவி வகித்த 25 ஆண்டுகளில் சாதிக்காத அதிகாரி - ஓய்வு பெற்ற பின் பெரிதாக சாதிக்கப் போவதில்லை.


நிபுணத்துவம் உள்ளவர்கள் கமிட்டியில் இடம்பெற்றால், நிர்வாகம் சீர்படும். தற்போது, தேசிய அடையாள அட்டைத் திட்டத் தலைவராக இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் நந்தன் நிலேகனியை மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டது. இதுபோல், இந்த அரசும் பயன்படுத்த வேண்டும். அது ஆட்சிக்கு நற்பெயரை வாங்கித்தரும்.அரசு நிர்வாகம் வெளிப்படையாக செயல்படுவதற்கான முயற்சி, திறமைவாய்ந்த இளம் அதிகாரிகளுக்கு முக்கியப் பொறுப்பு மற்றும் தொழில் துறையினரின் நிபுணத்துவத்தை பயன்படுத்திக் கொள்வது ஆகியனவே, தமிழகத்திலிருந்து ஊழலை ஒழிப்பதற்கான முதல் நடவடிக்கையாக அமையும். புதிய அரசு சிந்திக்குமா...

ல.ஆதிமூலம்

http://www.dinamalar.com/

கருத்துகள் இல்லை: