செவ்வாய், 3 மே, 2011

அமெரிக்கப் படையினர் தாக்கியபோது பதில் தாக்குதலில் ஈடுபடவில்லை பின்லேடன்'

அமெரிக்கப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டபோது பின்லேடன் திருப்பித் தாக்கியதாக கூறப்படுவது தவறு. அவர் பதில் தாக்குதலில் ஈடுபடவில்லை. அதற்குள் அவரை அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொன்று விட்டனர் என்று அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போத்தாபாத்தில் உள்ள 2 மாடிக் கட்டடத்தில் பின்லேடன் தனது குடும்பத்தினர் மற்றும் சிலருடன் தங்கியிருந்தார். இந்தக் கட்டடத்திற்குள் அதிரடியாக புகுந்த அமெரிக்க சிறப்பு ராணுவப் பிரிவினர் அதிரடித் தாக்குதல் நடத்தி பின்லேடனை வீழ்த்தினர். பின்லேடன் தவிர மேலும் 4 பேரும் உயிரிழந்தனர். இவர்களில் பின்லேடனைக் காக்க மனிதக் கேடயமாக பயன்படுத்தப்படட் ஒரு பெண்ணும் அடங்குவார்.

இந்தத் தாக்குதலின்போது பின்லேடன் நேரடியாக அமெரிக்கப் படையினருடன் மோதியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அமெரிக்கத் தரப்பு மறுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கத் தரப்பில் கூறுகையில், பின்லேடன் எதிர்த் தாக்குதல் நடத்தவில்லை. அதற்கான வாய்ப்பை அமெரிக்கப் படையினர் தரவில்லை. முதலில் பின்லேடனின் தலையிலும், பின்னர் அவரது மார்பிலும் அமெரிக்க வீரர்கள் சுட்டனர். அதில் அவர் சுருண்டு விழுந்து இறந்து விட்டார் என்றனர்.

இந்தத் தாக்குதலில் பின்லேடனின் மனைவி ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறின. ஆனால் அதையும் அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். பின்லேடனின் மனைவி காயமடைந்தார். அவரை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அமெரிக்க வீரர்கள் ஒப்படைத்து விட்டனர் என்றனர்.

அமெரிக்கக் கடற்படையின் சீல் பிரிவு வீரர்கள்தான் இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்லேடன் தங்கியிருந்த வீட்டுக்குள் ஹெலிகாப்டரிலிருந்து அவர்கள் உள்ளே இறக்கி விடப்பட்டு புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த நடவடிக்கைகளை அமெரிக்காவின் விர்ஜீனியாவில் உள்ள சிஐஏ தலைமையகத்திலிருந்தபடி அதிகாரிகள் நேரடியாக கண்காணித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: