செவ்வாய், 3 மே, 2011

பின்லேடனின் மரணம், புலிகளின் அழிவு: இரண்டினது மகிழ்ச்சிக்கும் வேறுபாடு இல்லையாம்

பின்லேடனின் மரணத்தின் பின்னர் அமெரிக்கர்கள் கொண்டாடும் மகிழ்ச்சிக்கும், நந்திக்கடலில் புலிகளின் அழிவுக்குப் பின்னர் சிறிலங்காவில் நடத்தப்பட்ட மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை என்று சிறிலங்காவின் மூத்த அமைச்சரும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலருமான டியு. குணசேகர தெரிவித்துள்ளார்.

பின்லேடனின் மரணத்துக்குப் பின்னர் அமெரிக்கர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது குறித்துக் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் வெற்றியைக் கொண்டாடிய சிறிலங்காவை இகழ்ந்தவர்கள், இப்போது பின்லேடனின் மரணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

அல்கெய்டாவைத் தோற்கடிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையில் பின்லேடனின் மரணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்து என்று அமெரிக்கா அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

ஆனால் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் போர்முனையில் பிரபாகரனும் அவரது தளபதிகளும் இல்லாதொழிக்கப்பட்ட வெற்றியை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை, பின்லேடனை அமெரிக்கா கொன்றதைப் பாராட்டியுள்ள ஜாதிக ஹெல உறுமய, இதற்காக அமெரிக்கர்கள் எப்படி மகிழ்ச்சி கொள்கின்றனரோ அதுபோலவே தாமும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மகிழ்ச்சிக் கூத்தாடியதாக கூறியுள்ளது.

சிறிலங்கா 2009 இல் பெற்ற வெற்றியை அமெரிக்கா மதிக்க வேண்டும் என்றும் ஜாதிக ஹெல உறுமய கேட்டுக் கொண்டுள்ளது.

மீளவும் புலிகளுக்கு உயிர் கொடுக்க அமெரிக்கா முனைவதைக் கண்டிப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: