ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

காந்திதேசத்தின் மறுபக்கம் 25

25
உமாமகேஸ்வரன் ஒரு காலத்தில் சிறிலங்கா பொலிசாரால்; மிகவும் தேடப்படுபவராக இருந்தவர். இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின் அத்துலத்முதலியின் ஏற்பாட்டின் பேரில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் சந்தித்துப் பேசிய பின் அவர் மீதான பிடியாணை நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதற்கான அறிவிப்பு அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை.

இந்தக் காலகட்டத்தில் அதாவது மாநாட்டுக்கு முன் புளொட் புத்தளம் பகுதியிலிருந்த ஒரு சிறு இராணுவ முகாமைத் தாக்கியிருந்தது. இந்தத்தாக்குதலில் பெறப்பட்ட ஆயுதங்களில் சில கற்பிட்டியிலிருந்து புளொட்டினது மாசுக்கருவாட்டுத் தொழிற்சாலையில் மறைத்துவைக்கப்பட்டது.

இந்த மாசுக் கருவாட்டுத் தொழிற்சாலைக்கு பொறுப்பாக இருந்தவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாத்தியார். வித்தை காட்டுவதில் வல்லவரான இவர் ஒரு சமயம் வழக்கம் போல வித்தை காட்ட முனைந்த போது அது முஸ்லீம்களுடனான மோதலாக முடிந்துவிட்டது.

அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் அந்த மாசுக்கருவாட்டுத் தொழிற்சாலை இருந்த பண்ணையை சோதனையிட்ட கற்பிட்டி பொலிஸ் அங்கு புதைத்து வைக்கபடப்டடிருந்த ஆயுதங்களை எடுத்ததோடு வாத்தியாரையும் கைது செய்து விட்டது.

அதுவரை புத்தளம், வில்பத்து பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களை புலிகள் தான் செய்திருந்ததாக நம்பிக்கொண்டிருந்த சிறீலங்கா பொலிசாருக்கும் இராணுவத்திற்கும் அவை புளொட்டின் வேலைகள் தான் என்று தெரிய வந்துவிட்டது.

எனவே கொழும்பு மற்றும் தென்பகுதிப் பொலிசாரும் இராணுவத்தினரும் உமாமகேஸ்வரனைப் பற்றி அக்கறைப் படாவிட்டாலும் புத்தளம் மாவட்ட பொலிசுக்கும் இராணுவத்திற்கும் அவர் மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தார்.

உமாமகேஸ்வரனுக்கு பொலிசின் கையில் சிக்கிய போது உண்மையிலேயே இதையிட்டுப் பயம் ஏற்பட்டது. புத்தளம் பகுதி இராணுவ முகாம் தாக்குதலுக்கு பொறுப்பாக இருந்த ஒருவரும் அவருடன் பிடிப்பட்டிருந்தார். கை அடையாளங்களை வைத்து அவர்கள் உண்மையைக் கண்டு பிடித்துவிட்டால் தான் தப்ப முடியாது என்று அவர் நினைத்தார்.

ஆனால் முஹமட் இப்ராஹிம் என்ற பெயரிலிருந்து உமாமகேஸ்வரனது அடையாள அட்டையைப் பார்த்த பொலிசார் உண்மையிலேயே அவரை ஒரு பெரிய கடத்தல் புள்ளி என்றே நினைத்துவிட்டார்கள். வழக்கமான பொலிஸ் விசாரணைப் பாணியில் அடி உதை கொடுத்து அவர் ஏன் புத்தளம் வந்தார் - முள்ளிக்குளத்தில் யாருடன் அவருக்குத் தொடர்பு புத்தளத்தில் யார் யாரைத் தெரியும் முள்ளிக்குளத்திலிருந்து என்ன சாமான்கள் கடத்துகின்றீர்கள் என்றெல்லாம் துருவித் துருவி விசாரிக்க ஆராம்பித்தார்கள்.


உமாமகேஸ்வரன் வில்பத்துக் காட்டுக் கரையிலிந்த பூக்குளத்தில் புத்தளத்திற்கு படகு ஏறிய போது உடன் வருபவர்களை ஆயுதம் ஏதுவும் எடுத்து வரவேண்டாம் என்று தடுத்துவிட்டார். அதனால் அவரை விசாரித்த பொலிசாருக்கு அவர்கள் இயக்க உறுப்பினர்களாக இருப்பார்கள் என்ற சந்தேகம் வரவில்லை. இயக்கத்தில் இருப்பவர்கள் ஆயுதங்களுடன் தான் வருவார்கள் என்பது அவர்களது எண்ணம். எனவே அவர்கள் இவர்களை முழுக்க முழுக்க கடத்தல்காரர்கள் என்று நம்பி அவர்களை விடுவிக்கப் பேரம் பேசி பெருந்தொகைப் பணத்தை அறவிடலாம் என்று கணக்குப் போட்டனர்.

அதற்குள் உமாமகேஸ்வரனுடன் பிடிபட்டிருந்த புத்தளம் இராணுவ முகாம் தாக்குதலுக்குப் பொறுப்பாயிருந்தவரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பொலிசார் எடுத்துவிட்டனர்.

அவர் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் னுPடுகு இன் வேட்பாளராகப் போட்டியிட்டவர். அவரை வேட்பாளர் என அத்தாட்சிப்படுத்தி தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல அவர் தன்னுடைய ஆயுதத்தையும் மெய்ப்பாதுகாப்பிற்கு ஆட்களையும் அழைத்துச் செல்ல அனுமதி வழங்கி கொழும்பில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய கடிதமே அது.

சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட உமாமகேஸ்வரன் தங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று வருவதாகவும் தங்களுக்கு எந்தக் கடத்தல் கோஸ்டியையும் தெரியாதென்றும் தங்களை அனாவசியமாக தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பான செயலென்றும் வாதிட்டார்.

பொலிசுக்கு ஏமாற்றமாய் போய்விட்டது. ஆனாலும் தங்களது அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மளனமில்லாமல் Pடுகு என்றால் புளொட் தானே. புளொட் காரரைத் தாங்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம் என்றார்கள் நிலைமை சிக்கலாய் போவதை உணர்ந்த உமாமகேஸ்வரன் தன்னை ஒரு பெரிய மனிதன் என்று காட்டிக் கொள்ளும் தோரணையில் “என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள் . நான் கொழும்பிலே பெரிய வர்த்தகர். அத்துலத்முதலியும், பிரேமதாசாவும் என்னுடைய நண்பர்கள். நான் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்லித் தனது மணிகூட்டில் பதித்து வைத்திருந்த அத்துலத் முதலியினதும், பிரேமதாசாவினதும் அலுவலக மற்றும் தனிப்பட்ட தொலைபேசி இலக்கங்களைத் குறித்துக் கொடுத்தார்.

அவர் பேசியவிதம் தொலைபேசி இலக்கங்களை மனப்பாடம் பண்ணியது போல் வேகமாக குறித்துக்கொடுத்த விதம் இதையெல்லாம் பார்த்து பொலிஸ்காரர்கள் பயந்து போய் விட்டார்கள். ஏதோ பெரிய இடத்து தொடர்புடைய மனிதனைப் பிடித்துவைத்துவிட்டோம் இதனால் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தொல்லைகள் ஏதாவது வந்துவிடப் போகின்றது என்று அஞ்சி அவரையும் அவருடன் பிடிபட்டவர்களையும் விடுதலை செய்தனர். தாங்கள் தவறுதலாக அவரை சிறை வைத்ததற்காக தங்களை மன்னிக்க வேண்டும் என்நு உமாமகேஸ்வரனிடம் மன்னிப்புக் கேட்டனர்.

பெரிய கண்டத்திலிருந்து பிழைத்தது போல் ஒரு நிமிடங்கூட அங்கு தாமதிக்காமல் அங்கிருந்த அவருக்குத் தெரிந்த நணபர் மூலமாக கார் ஒன்றை ஒழுங்கு செய்து கொண்டு கொழும்பு வந்து சேர்ந்தார்.

இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரம் கடந்ததும் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்புக்களுக்குமான உயர் குழுவின் முதலாவது கூட்டம் கொழும்பு கல்கிசை காலி வீதி வீட்டில் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாலபுத்தர், காண்டீபன் (மன்னார்), உமாமகேஸ்வரன் உட்பட கொழும்பு நிர்வாகப் பிரிவிலிருந்து ஆனந்தியும் மலையக அமைப்புக்களின் சார்பில் கதிரவனும் உமாமகேஸ்வரனால் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே வசந்தனது குளிசையை விழுங்கியிருந்த பாலபுத்தர் கதிரவனது நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் அவரது எதிர்ப்பை உமாமகேஸ்வரன் கணக்கில் எடுக்கவில்லை.

மாநாடு முடிந்தது. கொழும்பு திரும்பிய பாலபுத்தர் இரண்டு, மூன்று நாட்களாக மாநாட்டை புறக்கணித்த முக்கியமான மும்மூர்த்திகளுடன் இரகசிய ஆலோசனை ஒன்றை நடத்தியிருந்ததாக உமாமகேஸ்வரனுக்கு ஒரு செய்தி கிடைத்திருந்தது. இதைவிட மாநாட்டில் அவர் கலந்து கொள்வதற்கு முன்பே றோ அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியதாகவும் ஒரு லண்டன் கனவான் , ஒரு டெல்லி கனவான், ஆகியோருடன் சேர்ந்து உமாமகேஸ்வரனுக்கு எதிராகச் சென்னையில் கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் ENDLF ராஜன் அதற்குப் பின்னணியில் இருந்ததாகவும் தமிழகத்திலிருந்து ஒரு தகவல் அவருக்கு கிடைத்திருந்தது.


இந்த இரண்டு விடயங்களையிட்டும் உமாமகேஸ்வரன் அதிகளவுக்கு அத்திரமும் கவலையும் கொண்டிருந்தார். இது பற்றி மலையகப் பொறுப்பாளர் கதிரவனுக்குச் சொல்லி பாலபுத்தரைக் கொலை செய்து விட்டால் என்ன என்ற ஆலோசனையும் கேட்டார்.

கருத்துகள் இல்லை: