03
கொச்சின் சந்திப்பு முடிந்து ஒரு சில நாட்களுக்குள் முள்ளிக்குளம், செட்டிகுளம், முருங்கன் பகுதியில் அதாவது புளொட் முகாம்கள் இருந்த பகுதிகள் இந்திய படையின் முற்றுகைக்கு உள்ளாகின. அப்பகுதிகளை இணைக்கும் பிரதான பகுதிகளில் இந்திய இராணுவத் தடை அரண்கள் உருவாக்கப்பட்டன.
இலங்கையில் இந்தச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் போது தமிழ் நாட்டின் கரையோர நகரமான மண்டபத்துக்கு அருகே உள்ள தீவில் வைத்து றோ புளொட்டுக்கு ஆயுதம் வழங்கியது.
ஏ.கே 47 ரக இந்தியத் தயாரிப்புத் தானியங்கித் துப்பாக்கிகள் 240, எல்.எம்.ஜி.ரக இயந்திரத் துப்பாக்கிகள் 24, எம்.எம்.ஜி. இயந்திரத் தப்பாக்கிகள் 04, 30 கலிபர் ரக துப்பாக்கிகள் 06, 50 கலிபர் ரக துப்பாக்கிகள் 04, ஐசுPபு7 என்கிற சிறுரக குறுகிய தூர ஏவுகணை 28, மோட்டார்கள் 04 உட்பட பெருந்தொகையான ரவைகள், குண்டுகள், செல்கள், கைக்குண்டுகள், வாக்கிரோக்கிகள் திசையறி கருவிகள் என்பனவும் சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட அதிவேக விசைப்படகுகள் 03 என்பனவும் றோவால் புளொட்டிற்கு வழங்கப்பட்டது.
றோவின் ஆலோசனையின் பெயரில் இந்த ஆயுதங்களின் அரைவாசியை அந்தத் தீவில் பாதுகாப்பாக புதைத்து வைத்துவிட்டு மிகுதியை புளொட் இலங்கைக்கு எடுத்துச் சென்றது.
ஆயுதம் வந்த கையோடு உமாமகேஸ்வரன் செயலில் இறங்கினார். லெபனான் பயிற்சி பெற்ற நான்கு பேரின் தலைமையில் நான்கு தாக்குதல் குழுக்கள் உருவாக்கப்பட்டன.
இத்தாக்குதல் குழுக்களுக்கு பயிற்சி யளிப்பதற்காக வில்பத்து மற்றும் கற்பிட்டிப்பகுதிகளில் அமைந்திருந்த சிறு இராணுவ முகாம்களும், காவல் நிலைகளும் தாக்கப்பட்டன. சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்பு வைத்துக்கொண்டு புளொட் நடத்திய இந்தத் தாக்குதல்களை விடுதலைப்புலிகள் செய்ததாகவே சிறிலங்கா அரசு நினைத்துக் கொண்டது.
(புளொட் குழு ஒரு புறத்தில் இந்தியாவை எதிர்பார்ப்பதாக காட்டிக் கொண்டது. ஆனால் இந்தியாவுடன் இரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டு சிறிலங்கா அரசை எதிர்த்துப் போராடுவதாக சொல்லிக் கொண்டது. ஆனால் லலித் அத்துலத் முதலியுடன் அது இரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டது. ஜே.வி.பிக்கு எதிராகப் போராட விஜயகுமாரணதுங்காவின் மக்கள் கட்சி உறுப்பினர்களுக்கு செட்டிகுளத்தில் இராணுவ பயிற்சி கொடுத்தது. அதேநேரம் ஜே.வி.பிக்கும் நுவரெலியாவில் வைத்து இராணுவப் பயிற்சி கொடுத்தது. இவை வாசகர்களின் குழப்பத்தைத் தவிர்க்க இங்கே குறிப்பிடப்படுகின்றது).
சிறிலங்கா இராணுவத்தின் மீதான தாக்குதல் நடத்திய நான்கு குழுக்களில் மிகத் திறம்பட செயற்பட்ட 3 குழுக்கள் மாலைதீவு இராணுவ நடவடிக்கைக்கு தெரிவு செய்யப்பட்டன. முதலில் இந்தக்குழு தலைவர்களிடமோ அல்லது அந்தக்குழுக்களின் இணைத் தலைவர்களிடமோ இந்த விடயம் சொல்லப்படவில்லை. முக்கியமான தாக்குதல் ஒன்றை நடாத்த பயிற்சி எடுப்பது என்றே சொல்லப்பட்டது. றோவினால் ஆயுதம் வழங்கப்பட்ட இடமான மண்டபத்திற்கு அருகில் உள்ள தீவே பயிற்சிக்குரிய தளமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.. 3 குழுக்கள் அந்தத்தளத்தில் பாதுகாப்பாக நிலைகொண்டிருக்க மூன்றாவது குழு கடல்வழியாக வந்து தீவின் பிரதேசத்தில் தாக்குதல் நடாத்தி தீவைக் கைப்பற்றுவது போல் சுழற்சிமுறையில் பயிற்சியளிக்கப்பட்டது. உமாமகேஸ்வரனின் நேரடி மேற்பார்வையில் இரண்டு மாபதங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்ட இந்தப் பயிற்சியை றோ அதிகாரிகளும் அடிக்கடி வந்து பார்வையிட்டனர்.
அந்தத்தளத்தில் பயிற்சி எடுத்தவர்கள் சிறிலங்கா அரசின் காரைநகர் கடற்படைத் தளத்தையோ, அல்லது அதையொத்த வேறு தளத்தையோ தான் தாக்கப் போவதாக நினைத்துக் கொண்டார்கள். ஒரு மாத பயிற்சியின் பின்பே தொலைத்தொடர்புக்குப் பொறுப்பான ஒருவருக்கும் தாக்குதலுக்கு தலைமை தாங்கும் ஒருவருக்கும் விசயம் சொல்லப்பட்டது. அவர்கள் இருவரும் மாலைதீவு சென்று நிலமைகளை அவதானித்து ரெக்கி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கட்டுநாயக்கா விமான நிலையத்தினூடாக அவர்கள் அடிக்கடி மாலைதீவு செல்லும் போது சிறிலங்கா அதிகாரிகளுக்கு சந்தேகம் வரலாம் என்ற காரணத்தினால் திருவானந்தபுரம் விமான நிலையத்திலிருந்து இந்தியக்கடவுச்சீட்டிலேயே அவர்கள் சென்றுவர ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
இந்த ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்து நேரத்தில் ஏற்கனவே இந்திய இராணுவத்துடனும், றோவுடனும் ஒட்டிக்கொண்டிருந்த அவர்களின் செல்லப்பிள்ளையான ENDLF இன் தலைவர்களை அழைத்து றோ அதிகாரிகள் பேசினார்கள்.
எல்.ரி.ரி.யும், புளொட்டும் ஒன்று சேர்ந்துவிடும் போலிருக்கிறது. இந்தியாவையும், இந்திய இராணுவத்தையும் எதிர்த்து உமாமகேஸ்வரன் விடும் அறிக்கைகள் புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் இரகசியத் தொடர்பு இருப்பதைக் காட்டுகின்றது. ஆவர்கள் இருவரும் சேர்ந்தால் உங்களுக்கு ஆபத்து. அதற்கு முன் உமாமகேஸ்வரனை கொலை செய்துவிட்டால் அவரின் விசுவாசிகள் தவிர மிச்சப்பேரை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தவர்கள் தானே, எதற்காகப் பிரிந்திருக்க வேண்டும் என்று ENDLF தலைவர்களுக்கு உபதேசம் செய்யப்பட்டது.
றோவின் உபதேசத்தில் மயங்கிய அவர்கள் அதற்கு ஒத்துக்கொண்டனர். நீங்கள் இப்போதிலிருந்து அதற்கான முயற்சியில் இறங்குங்கள். ஆனால் நாங்கள் சொல்லும்வரை காரியத்தைச் செய்யக்கூடாது என்று அவர்களுக்கு கண்டிப்பான உத்தரவு போடப்பட்டது. உமாமகேஸ்வரனை ஒழிக்கும் முயற்சியில் ENDLF, புளொட்டில் இருந்த வசந்தன் என்பவரை அணுகியது.
நாங்கள் ஏன் பிரிந்திருக்க வேண்டும், நாங்கள் ஒன்று சேர்வதற்கும் புளொட்டில் உள்ளவர்கள் கஸ்டப்படுவதற்கும்; உமாமகேஸ்வரனே காரணம், அவரைத் தட்டிவிட்டால் நாங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்;ந்து இயங்கலாம் என்று வசந்தனுக்குச் சொல்லப்பட்டது.
புலிகள், புளொட்டின் முள்ளிக்குளம் முகாமை தாக்கிய போது பலயாகிப்போன இந்த வசந்தன் என்ற நபர், வெளியில் உமாமகேஸ்வரனது விசுவாசியாகக் காட்டிக் கொண்டாலும், உண்மையில் அவர் தீவிரமான :உமா எதிர்ப்பாளர், புளொட் இரண்டாக உடைந்து சிதறிய போது ENDLF இலும் புளொட்டிலும் சேராமல் தமிழகத்தில் சிதறிப்போய் வாழ்ந்;த உமாமகேஸ்வரன் எதிர்ப்பாளர் பலருக்கு புளொட்டின் சார்பில் தான் தமிழகத்தில் செய்த வாகனக்கடத்தல் வழிபற்றி நடவடிக்கைகள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு இரகசியமாக ஆதரவழித்து வந்தார்.
இவருக்கு வயதும் அனுபவமும் குறைவு என்பதால் நிறைய பொறுப்பற்ற தனங்களும் இருந்தன. இவர் ENDLF தன்னிடம் தெரிவித்த தகவலை வவுனியாவில் தங்கியிருந்த தனது சகாவான சந்திரன் என்பவருக்குத் தெரிவிக்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இப்படிப்பட்ட விடயத்தை கடிதம் மூலம் தெரிவிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது அவரது அறிவுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதுவும் எழுதிய அந்தக் கடிதத்தை கோவை மாவட்டம் திருப்பூர் நகரத்தில் இருந்த உமாமகேஸ்வரன் ஆதரவாளர் ஒருவர் வீட்டில் தனது உடமைகளோடு தவறுதலாக வைத்துவிட்டுப் போய்விட்டார்.
தற்செயலாக ஒரு புத்தகமொன்றில் இருந்த அந்தக் கடிதத்தை கண்டெடுத்துப் படித்த அந்த திருப்பூர்காரர் அதிலிருந்த விடயத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அதை உடனடியாக உமாமகேஸ்வரனிடமும் சேர்ப்பித்தும் விட்டார்.
கடிதத்தைப் படித்த உமாமகேஸ்வரனுக்கு தலைகொள்ள முடியாத ஆத்திரம் வந்தது. உடனடியாக வசந்தனைப்பிடித்து தட்டிவிடலாம் என்று நினைத்தார். ஆனால் அப்படிச் செய்தால் இயக்கத்துக்குள் குழப்பம் வந்துவிடும். ஆதனால் மாலைதீவு விவகாரம் கெட்டுவிடும் என்று அவருக்குத் தோன்றுகிறது.
ஆனால் வசந்தன் செயலில் முந்துவதற்குமுன் அவரது வெளித் தொடர்புகளை கட்டுப்படுத்தி அவரை முடக்குவதற்கு வெளிவேலைகளில் ஈடுபட்டிருந்த அவரை உடனடியாக முள்ளிக்குளம் முகாமுக்கு போகும்படி பணித்தார் உமாமகேஸ்வரன்.
அடுத்த நடவடிக்கையாக நுவரெலியாவில் ஜே.வி.பி இயக்கத்திற்கு பயிற்சி கொடுப்பதற்கான ஆயத்த வேலைகில் ஈடுபட்டிருந்த சங்கிலி என்ற கந்தசாமியை உடனே கொழும்பிற்கு வரும்படி உத்தரவிட்டார். சங்கிலியிடம் விசயத்தைச் சொன்னால் அவர் தனது பழைய பாணியில் நடந்து தலைமை விசுவாசத்தைக் காட்ட முற்பட்டால் அது இன்னமும் பெரிய பிரச்சினையாகி மாலைதீவு விவகாரத்தை கெடுத்துவிடும் என்பதால் நுவரெலியாவில் இருப்பது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று மட்டுமே சொல்லப்பட்டது.
உமாமகேஸ்வரனின் நோக்கம் சங்கிலியிடம் விசயத்தைச் சொல்லாமலே அவரை மள்ளிக்குளம் முகாமுக்கு அனுப்பி வைத்தாலே அவன் இருக்கிற பயத்தில் வசந்தன் அடங்கிவிடுவான் என்பதாகும்.
ஏற்கனவே முள்ளிக்குளத்துக்குப் போன வசந்தன் சங்கிலி அங்கு வரப்போவதை அறியாது உமாமகேஸ்வரன் சங்கிலியை வைத்து கொலைகாரப் படை ஒன்றை நுவரெலியாவில் உருவாக்குவதாக அங்கிருந்தவர்களிடம் இரகசியமாக பிரசாரம் செய்து வந்தான்;.
இந்தச் சூழ்நிலையில் சங்கிலி அங்கே போனபோது அங்கிருந்தவர்களுக்கு கிலி பிடிக்காத குறைதான். ஏல்லோரும் சங்கிலியை தங்களைத் தட்ட வந்த கொலைகாரனாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக