ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

சிறிலங்கா: ஐ.நாவின் நாடகத்திற்கு அப்பால் - ஓர் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011, 00:46 GMT ] [ தி.வண்ணமதி ]

லுமும்பா பல்லைக்கழகத்திலிருந்து போலிப் பட்டத்தைப் பெற்ற மகிந்தர் தற்போது வரலாற்றுப் பழமைமிக்க மகாவம்சத்தின் புதிய பாகங்களை எழுத முனைகிறார். நாட்டினது வரலாற்றினையே மாற்றிக் காட்டக்கூடிய தலைவரவர் என்ற எண்ணத்தினால் போரின் பின்னர் மகிந்தவின் முறை தவறிய செயற்பாடுகள் நியாப்படுத்தப்பட்டன.

இவ்வாறு Eurasia Review இணையத்தளத்தில் சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகவியலாளர் Nilantha Ilangamuwa எழுதியுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

அதன் முழுவிபரமாவது,

ஐ.நாவினது வல்லுநர்கள் குழுவின் அறிக்கை தன்னகத்தே எதனைக் கொண்டிருந்தாலும் அந்த அறிக்கை அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கு வழிசெய்யப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் தொடர்பான பொறுப்புச் சொல்லும் பொறிமுறை தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் பன் கீ மூன் மூவர் அடங்கிய வல்லுநர்கள் குழுவொன்றை அமைத்திருந்தார்.

பன் கீ மூன் அமைந்திருந்த வல்லுநர்கள் குழுவிற்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் கிடைக்கப் பெற்றதாம். ஆனால் இவற்றில் சில தவறான தகவல்களைக் கொண்டிருந்த அதேநேரம் வல்லுநர்கள் குழுவின் பணியினைச் சீர்குலைக்கும் வகையிலும் சில ஆவணங்கள் அனுப்பப்பட்டதாக நம்பகமான தகவல் மூலங்கள் கூறுகின்றன.

ஐ.நாவின் இந்த அறிக்கை ஊடகங்கள் வாயிலாக வெளிவருமிடத்து கொழும்பில் என்ன நடக்கும்? சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட இந்த அறிக்கையினை வெற்றுக் குப்பை என வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே கருத்துரைத்திருக்கிறது.

ஐ.நாவின் இந்த முயற்சி சிறிலங்காவிலுள்ள பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் தேசியவாத உணர்வினை மேலும் அதிகரிக்கும். இதன் விளைவாக மகிந்த அரசாங்கத்திற்கான ஆதரவு பெரும்பான்மையினர் மத்தியில் மேலும் வலுப்பெற பன் கீ மூனின் இந்த முயற்சியினைச் சிறிலங்கா தட்டிக்கழிக்கும் நிலைதான் தோன்றும். இந்த நிலையில் போர்க்குற்றங்களை விசாரணை செய்தல் என்ற விடயத்தில் ஐ.நா எந்தளவிற்குச் செல்லும் என்பது கேள்விக்குரியதே.

சிறிலங்காவில் போர் முடிவுக்குவந்த பின்னர் இலங்கைத் தீவினது அரசியல் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டது. 18வது அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் கொண்டு வரப்பட்டமையானது அதிபர் ராஜபக்சவிற்கு அதிக அதிகாரங்கள் சென்று சேர்வதற்கு வழிசெய்தது. மேலும் அதிக அரச நிறுவனங்களும் திணைக்களங்களும் மகிந்தவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ்சென்றது.

தனது அதிகாரத் தளத்தினை மேலும் பலப்படுத்தும் வகையில் அதிபர் ராஜபக்ச வருகின்ற ஆண்டுகளில் மேலுதிக சட்டச் சீர்த்திருந்தங்களையும் அரசியலமைப்பு மாற்றங்களைக் கொண்டுவருவார் என நாம் எதிர்பார்க்கலாம். இலகுவில் தனது அதிகாரத்தினைக் கைவிடுவதற்கு ராஜபக்ச தயாராக இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தபோது இருந்த ராஜபக்ச இப்போதில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்வேண்டும்.

அரசியலில் உண்மையான அதிகாரம் என்ன என்பதை நன்கு சுவைத்து மிகழ்ந்தவர் இவர். தவிர, லிபியா, ஈராக், சீனா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் கடும்போக்கு ஆட்சியாளர்கள்தான் மகிந்தவை வழிநடத்தும் ஆசான்கள். மகிந்தவின் ஆட்சிமுறையில் மேற்குறித்த இந்த நாடுகளின் ஆட்சிப் பண்புகளை நாங்கள் அதிகம் காணலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட வேளையில் சிங்கள அரசன் துட்டகைமுனுவின் மறு அவதாரம்தான் தான் என மகிந்த கருதினார்.

ஆனால் துட்டகைமுனுவிடமிருந்த நற்பண்புகள் கூட மகிந்தரிடம் இல்லை. போர்க்களத்தின் வீழ்ந்த தமிழ் மகன் எல்லாளனுக்கு வழங்க வேண்டிய அனைத்து மரியாதைகளையும் துட்டகைமுனு செய்திருந்தான்.

மகிந்த ராஜபக்சவின் உதாரண புருசராகத் திகழும் முகமர் அல் கடாபி கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்:

“எனக்குச் சரியான நினைவில் இல்லை. கடந்த 40 ஆண்டுகளாக அல்லது அதற்கும் கூடுதலான ஆண்டுகளாக நான் மக்களுக்கு வீடுகள், மருத்துவமனைகள், பாடசாலைகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் பசியாக இருந்தபோது உணவு கொடுத்தேன். பாலை நிலங்களைப் பண்ணை நிலங்களாக மாற்றினேன். நான் தத்தெடுத்த மகளைக் கொன்றபோது அவர்களைத் துணிந்து நின்று எதிர்கொண்டேன். என்னைக் கொல்ல முனைந்து தோற்றுப்போன அவர்கள் அப்பாவிக் குழந்தையினைக் கொலை செய்தனர். இதன் பின்னர் ஆபிரிக்காவின் எனது சகோதர சகோதரிகளுக்குப் பணம் தந்து உதவினேன்” என்றார்.

லிபியாவில் கடாபி கைக்கொள்ளும் ஆட்சிப்பண்பு எதுவோ அதனையே ராஜபக்சவும் அவரது கூட்டணியும் இன்று சிறிலங்காவில் கைக்கொள்ளுகிறார்கள்.

தென்னாசியாவில் நீண்ட பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத் தானே முடிவுக்குக் கொண்டு வந்தாகவும் இன்று சிறிலங்காவில் அனைவரும் மரணபயமின்றி உண்மையான சுதந்திரத்தினை அனுபவித்தவாறு சுற்றித் திரியும் நிலையினைத் தோற்றுவித்திருப்பதாகவும் அதிபர் ராஜபக்ச மார்தட்டிக் கொள்கிறார்.

மக்களுக்காகத் தான் பெற்றுக்கொடுத்த இந்தப் பெரு வெற்றிக்குப் பிரதி உபகாரமாக மக்கள் தன்னைத் தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்கவேண்டும் என மகிந்தர் விரும்புகிறார்.

போரில் வெற்றி பெற்றமைக்கான பேரும் புகழும் தனக்கானதே என ராஜபக்ச செய்ற்படுவது விந்தையானது. ஆனால் துனிவுடன் படைநடாத்திப் போரை வென்றுகொடுத்த ஜெனரல், அமெரிக்காவின் தலைமையிலான போருக்கு ஆதரவு தந்த அனைத்துலகக் குழுக்கள், இந்தியா மற்றும் விடுதலைப் புலிகளின் வன்முறைப் பாதையினை அடியோடு வெறுத்த தமிழர்களை எல்லாம் மகிந்த மறந்தே விட்டார்.

போரில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெற்றிவதற்கு ஏதுவான சூழமைவினை ஏற்படுத்திய அதே மக்களை அவமானப்படுத்தும் வகையில் மகிந்த அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

லுமும்பா பல்லைக்கழகத்திலிருந்து போலிப் பட்டத்தினைனைப் பெற்ற மகிந்த தற்போது வரலாற்றுப் பழமைமிக்க மகாவம்சத்தின் புதிய பாகங்களை எழுத முனைகிறார். நாட்டினது வரலாற்றினையே மாற்றிக்காட்டக்கூடிய தலைவரவர் என்ற எண்ணத்தினால் போரின் பின்னர் மகிந்தவின் முறைதவறிய செயற்பாடுகள் நியாப்படுத்தப்பட்டன.

மகிந்தவின் தேசியத் தலைமைத்துவம் என்பது தட்டுத் தடுமாறித் தமிழில் உரை நிகழ்த்துவதுடன் மட்டுப்படுத்தப்பட்டது போலும். அனைத்துலக சமூகத்தினையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் வகையில் தேர்தல் காலத்தில் தமிழிலும் தட்டுத் தடுமாறி உரைநிகழ்த்தியிருந்தார்.

ஐ.நாவின் வல்லுநர்கள் குழுவினது அறிக்கை அனைத்துலக ரீதியில் மகிந்தவின் நம்பகத்தன்மையினைப் பெரிதும் பாதித்தாலும் உள்நாட்டில் ராஜபக்ச அரசாங்கத்தின் கரங்கள் பலப்படுவதற்கே வழிசெய்யும். அத்துடன் கொள்கைகள் எதுவுமற்ற நாடுகள் சில எத்தகைய சூழ்நிலையிலும் மகிந்தருக்கு முண்டுகொடுக்கத் தயாராக இருக்கும் சூழமைவில் எது நடந்தாலும் மகிந்த ஆட்சி உயிர்வாழும் என்பது தான் உண்மை.

நிலைமையினைத் தனக்குத் தகுந்தால்போல் மாற்றிக் கொள்வதில் மகிந்த ஒரு விண்ணன் என்று தான் கூறவேண்டும். நாட்டினது எதிர்க்கட்சிகளின் பலத்தினை நலிவடையச் செய்யும் வகையில் மகிந்த ராஜபக்ச தனது ஊத்தை அரசியல் விளையாட்டில் வெளுத்துக் கட்டுகிறார்.

சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சி என்பது உழுத்துப்போன வெறும் கூடு. காத்திரமான மக்கள் உரிமை அமைப்புகள் எதுவும் தற்போது இலங்கைத் தீவில் இல்லை. இந்தியாவில் உள்ளதைப் போல, மக்கள் மீது செல்வாக்கினைச் செலுத்தவல்ல வினைத்திறன் மிக்க ஊடகங்களோ அன்றி மக்கள் அமைப்புக்களோ சிறிலங்காவில் இல்லை.

ராஜபக்சவினைப் கூற்றுப்படி, சிறிலங்காவினைச் சேர்ந்த நாங்கள் அவர் பெற்றுக்கொடுத்த சனநாயகத்தினை அனுபவிக்கிறோமாம். மகிந்தவினது ஆட்சியில் இல்லை என்ற சொல்லுக்கே இடமில்லை, ‘இதுதான் ராஜபக்சவின் சனநாயகம்’. லிபியாவினது தலைவர் கடாபியின் ஆட்சிப்பாணியும் இதுதான். ஈற்றில் 30 ஆண்டுகளின் பின்னர் தனக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் மக்கள் புரட்சியினை கட்டுக்குக் கொண்டு வரமுடியாமல் கடாபி திண்டாடுகிறார்.

மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இடம்பெறும் இதுபோன்ற அரச எதிர்ப்பு நிலையொன்று இலங்கைத் தீவில் இப்போதைக்கு ஏற்படுவதற்காக வாய்ப்புகள் எதுவுமில்லை. இதுபோல அரச எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெறுவதற்கு ஏதுவாக சிறிலங்காவில் காத்திரமான எதிர்க்கட்சித் தலைமை இல்லையென்பது துரதிஸ்ரவசமானது.

தற்போது ஐவரிகோஸ்டில் காணப்படுவதைப் போல நாட்டினது எதிர்க்கட்சிகள் பலமடைய, மகிந்த ராஜபக்ச தனது அதிகாரங்களை வழங்குவதற்கு மறுக்கும் ஒரு நிலைமை சிறிலங்காவில் ஏற்படுமா? ஐவரிகோஸ்ட்டின் முன்னாள் அதிபரினைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஐ.நா தலையிட்டதைத் போல சிறிலங்காவினது விடயத்திலும் ஐ.நா தலையிடுமா? ஈற்றில் ஐவரிகோஸ்ட்டின் முன்னாள் அதிபர் ஐ.நா படையினரிடம் சரணடைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் மகிந்த அரசாங்கத்தின் நாட்டுப்பற்று என்ற மாயையினால் 'எதிர்க்கும் உரிமை’ என்பது குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது. சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் நாட்டுப் பற்று என்பது அதிபர் ராஜபக்சவின் கூற்றுக்களுக்கு ஆமாம் போடுவதுதான்.

தன்னுடைய ஒரு கட்சி 'சனநாயகத்தின்’ கீழ் நாட்டுமக்கள் சிறப்பாக வாழுகிறார்கள் என அதிபர் மகிந்த ராஜபக்ச மார்தட்டிக் கொள்ளும் நாள் தொலைவில் இல்லை. சிறிலங்காவிலுள்ள மக்களின் சுதந்திரத்தினை மகிந்த நன்குதான் ஏப்பமிடுகிறார். பின்னொரு நாளில் மேலும் வருந்துவதற்கு இடமளிக்கும் வகையில் மகிந்தரின் ஆட்சியைத் தொடர்ந்தும் அனுமதிப்பதா அல்லது மகிந்த சகோதரர்களை குப்பைக்கூடையில் போடுவதா என நாட்டுமக்கள் தீர்மானிப்பதற்கான தருணமிது.

நாங்கள் இன்று சிறிலங்காவில் காண்பது உண்மையான சுதந்திரமன்று. ஆனால் ராஜபக்சவின் இராச்சியத்தில் மாயைகள் நிறைந்த சனநாயக ஆட்சியின் கீழ் தங்களுக்கு நேரடியகப் பாதிக்கப்படும் வரைக்கும் இந்த மக்கள் தங்களது விதியினை உணர்ந்துகொள்ளப்போவதில்லை என்பது கவலைதரக்கூடியது.

கருத்துகள் இல்லை: