வெள்ளி, 29 ஏப்ரல், 2011

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கான வாக்குறுதியை அடுத்து நிபுணர்குழு அறிக்கையில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முடிவு

தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தத் தக்கதான அதிகாரப் பகிர்வொன்று குறித்த இலங்கையின் வாக்குறுதியையடுத்து நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே பிரஸ்தாப வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவோ, அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இல்லை என்பது குறித்து கடும் தொனியில் இந்தியப் பிரதமர் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறைந்த பட்சம் எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று உறுதியாக வாக்களித்தால் மட்டுமே நிபுணர் குழு அறிக்கை விடயத்தில் இலங்கைக்குச் சார்பாக செயற்பட முடியும் என்று இந்தியப் பிரதமர் விடாப்பிடியாக தெரிவித்துள்ளார்.

வேறு வழியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறான வாக்குறுதியை அளித்த பின்னரே நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இந்தியா ஓரளவுக்கு இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது. ஆயினும் அதனை முழுமையாக ஆராய்ந்த பின்பே இறுதி நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்றும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: