சிறிலங்கா மீதான ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று மாகாண முதலமைச்சர்களின் மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ளது.
அகலவத்தையில் உள்ள குகுலேகங்க விடுதியில் மாகாண முதலமைச்சர்களின் வருடாந்த மாநாடு நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சிறிலங்காவில் உள்ள எட்டு மாகாண முதலமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டிலேயே சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தும் அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டை நிலைப்பாட்டில் சிலகட்சிகள்
சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டும் ஐ.நா அறிக்கை தொடர்பாக சில கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சில கட்சிகள் அரசின் மீது அவப்பழி சுமத்தும் அறிக்கையை நிராகரித்துள்ளதாக கூறியுள்ளபோதும்- விசாரணை நடத்துமாறு கூறுகின்றன.
இந்தக் கட்சிகள் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ள நோக்கம் தான் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரவலான எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஏற்பாடு
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக சிறிலங்காவில் பரவலான போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வானொலி அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்குப் பகுதி மக்கள் நிபுணர்குழு அறிக்கையை நிராகரித்துள்ளதாகவும், சிறிலங்கா அரசின் மீது போர்க்குற்றம் சுமத்தும் இந்த அறிக்கையைக் கண்டித்து அடுத்த சில நாட்களில், மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை போன்ற இடங்களில் பேரணிகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த வானொலி கூறியுள்ளது.
நேற்று முன்தினம் கண்டியில் ஜாதிக ஹெல உறுமயவின் ஏற்பாட்டில் எதிர்ப்புப் பேரணி ஒன்று நடத்தப்பட்டிருந்தது. அத்துடன் அத்தனைகல, நிட்டம்புவ, ஹொரண ஆகிய இடங்களிலும் பேரணிகள் நடைபெற்றுள்ளன.
இந்தப் பேரணிகளில் ஐ.நா நிபுணர்குழுவையும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனயும் கேவலப்படுத்தும் வகையிலான முழக்கங்கள் எழுப்பப்படுவதுடன், பான் கீ மூனின் உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் சகல பகுதிகளிலும் ஐ.நாவின் அறிக்கைக்கு எதிராக பேரணிகளை ஒழுங்கு செய்யுமாறு சிறிலங்கா அரசாங்கம் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
உள்ளக அறிக்கையே இது
சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை அதிகாரபூர்வமானதல்ல என்று சிறிலங்காவின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் ஐக்கிய முன்னணி கூறியுள்ளது.
ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் இந்த அறிக்கை உள்ளக அறிக்கை மட்டுமே என்றும், இதை தமது கட்சி நிராகரிப்பதாகவும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.
சப்ரகமுவ மாகாணசபையில் கண்டனத் தீர்மானம்
சிறிலங்காவின் சப்ரகமுவ மாகாணசபையில் நேற்று ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்ரகமுவ மாகாணசபையின் முதல்வர் ரஞ்சித் பண்டார கொண்டு வந்த இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதுடன், இது விரைவில் ஐ.நாபொதுச் செயலர் பான் கீ மூனுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்தத் தீர்மானத்துக்கு ஐதேக, ஜேவிபி போன்ற கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தனர்.
அறிக்கையை ஆராய பிரட்மன் தலைமையில் ஐதேக குழு
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை ஆராய பிரட்மன் வீரக்கோன் தலைமையிலான குழுவொன்றை ஐதேக நியமித்துள்ளது. ஐதேகவின் பதில் பொதுச்செயலர் தயா பல்பொல இந்தக் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தக் குழுவின் ஆலோசனையை பெற்ற பின்னரே கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச இந்த அறிக்கையை தவறானது என்று நிராகரித்துள்ளார். ஐ.நா தனது அதிகார வரம்பை மீறிச் செயற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக