ராஜபக்சவை தண்டிக்க ஐ.நா. அறிக்கையின்படி உடனே விசாரணை மேற்கொள்ள இந்தியா எவ்விதத்திலும் முட்டுக்கட்டையாக நிற்க கூடாது என எச்சரிக்கை செய்யவும், ஐ.நா.வின் நடவடிக்கையை துரிதப்படுத்தவும் தமிழர்களே வீதிக்கு வாருங்கள் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஈழத் தமிழர்கள் தங்கள் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக ஜனநாயக ரீதியாகவும், ஆயுதம் ஏந்தியும் நடத்தி வருகிறார்கள். ஈழத்தமிழ் மக்களுடைய நியாயமான இப்போராட்டங்களுக்கும் அவர்களது விடுதலைக்கும் தமிழகத்திலிருந்து தொடர்ந்து ஆதரவுக் குரல் எழுப்பப்பட்டு வந்திருக்கிறது. எனினும் மிக முக்கியமான காலகட்டங்களில் தமிழகத்தில் ஒன்று திரண்ட போராட்டமாக அது அமைந்ததில்லை.
குறிப்பாக 2009ஆம் அண்டு ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு சர்வதேச உதவியுடன் கடும் தாக்குதல் நடத்தியபொழுது போர் நிறுத்தம் செய்வதற்கு ஈழத்தில் இருந்து எழுந்த அபயக்குரல் தமிழகத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு சென்றடையவில்லை. முள்ளிவாய்க்காலில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டது, மருத்துவமனைகள் மீது குண்டுவீசி தாக்கியது, விசாரணையின்றி வெள்ளைவேன்களில் தமிழ் இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது, ஒரு சில மணி நேரங்களில் 14 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கடல் நீருக்குள் அமுக்கி கொல்லப்பட்டது போன்ற நிகழ்வுகள் அனைத்துமே அப்பொழுதே தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.
எனினும் ஈழ தமிழ் மக்களுக்கு எதிரான இந்த கொடூர தாக்குதலை நிறுத்துவதற்கு தமிழகத்திலிருந்து 7 கோடி தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டிருப்பின் லட்சக்கணக்கான ஈழ தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். தமிழ் ஈழம் எனும் கனவும் நிறைவேறி இருக்க கூடும். ஆனால் தமிழகத்தில் நடந்தது அத்தனையும் உபயோகமற்ற வகையில் கட்சிகளினுடைய அடையாள உண்ணாவிரத, ஆர்ப்பாட்ட, பேரணிகளாக அமைந்தது.
தமிழர்களின் இந்த ஒற்றுமையற்ற தன்மையை இந்திய அரசும், இலங்கை அரசும் நன்கு பயன்படுத்தி கொண்டன. அதன் விளைவு, ஓர் இனம் முற்றாக அழிக்கப்பட்டது. 50 ஆண்டு கால போராட்டம் பின்னடைவைச் சந்தித்தது. இரண்டு வருடங்களுக்கு பிறகு ஈழத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளும் சர்வதேச போர் விதிமுறைகளுக்கு மாறானவை என்று ஐ.நா அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
லிபியாவில் 6 ஆயிரம் பொது ஜனங்கள் மரணமெய்தினார்கள் என்பதற்காக லிபியாவின் கடாபி ஐ.நா படைகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறார். எகிப்து அதிபர் முபாரக் வெளியேற்றப்பட்டார். ராஜபக்சவை குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய அந்நிய தேச மக்களிடத்திலேயே கூட எழுந்து விட்டது. ஆனால் தொப்புள் கொடி உறவு கொண்ட 7 கோடி தமிழ் மக்களிடத்தில் ஒருமித்த குரலாக இன்னும் எழவில்லை.
ஐ.நா.வின் அறிக்கையைக் கிழித்தெறிந்து குப்பையில் போட வலியுறுத்தி ராஜபக்ச மே 1ஆம் நாள் கொழும்பில் போர்க்கோலம் பூணப்போகிறார். ஈழத் தமிழர்களை காப்பாற்ற தான் முடியவில்லை. குறைந்தபட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவும், கூட்டாளிகளும் தண்டனையிலிருந்து தப்பிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ராஜபக்ச தண்டிக்கப்படவில்லை என்றால் மாண்டு போன தமிழர்களின் நீண்ட கால தமிழ் ஈழ கனவும் அவர்கள் மறைந்தது போலவே மண்ணோடு மண்ணாகி போய்விடும். இனியும் ஒரு கணம் கூட காலம் தாழ்த்துவற்கு தமிழ் மக்கள் இடம் அளித்துவிடக் கூடாது. தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில், ஓர் உணர்வில் திரள வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தங்களை தேசிய அளவிலும், மாநில அளவிலும் அடையாளப்படுத்தி கொள்ளக் கூடிய காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க. அ.இ.அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி, பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, கொங்குநாடு முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் இன உணர்வாளர்களும், சமுதாய இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும், வணிக தொழில் நிறுவனங்களும் அரசியல் மனமாட்சரியங்களுக்கு அப்பாற்பட்டு உலகமே வியக்கும் வண்ணம் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்த முன் வர வேண்டும்.
சாதி, மத, இன, கட்சி மாட்சறியங்களை மறந்து 7 கோடி தமிழர்களும் தமிழர்களாக எழுவதற்கு இதுவே தருணமாகும். ராஜபக்சவை தண்டிக்க ஐ.நா. அறிக்கையின்படி உடனே விசாரணை மேற்கொள்ள இந்தியா எவ்விதத்திலும் முட்டுக்கட்டையாக நிற்க கூடாது என எச்சரிக்கை செய்யவும், ஐ.நா.வின் நடவடிக்கையை துரிதப்படுத்தவும் தமிழர்களே வீதிக்கு வாருங்கள்'' என்று கிருஷ்ணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தனித்தனியே புதிய தமிழகம் கட்சி சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக