புதன், 20 ஏப்ரல், 2011

பிரபாகரனை மீட்கும் அமெரிக்க முயற்சியை தோற்கடித்து விட்டதால் தான் சிறிலங்கா மீது இந்த ஆத்திரமாம்

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் ஆசியுடன் மேற்கொள்ளப்படும் சிறிலங்கா மீதான இராஜதந்திரப் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகவே நிபுணர்கள் குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளது ஜாதிக ஹெல உறுமய.

சிறிலங்காவின் சக்தி, மின்சக்தி அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளருமான, சம்பிக்க ரணவக்க கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“ இந்த அறிக்கை ஐ.நாவின் நெறிமுறைகளுக்கு முரணானது. ஐ.நா பொதுச்செயலர் தனிப்பட்ட ரீதியாக நியமித்த குழுவே இது என்பதை நிபுணர்கள் குழுவின் உறுதி செய்கிறது.

சிறிலங்கா மீதான ஒரு இராஜதந்திர பயங்கரவாதத் தாக்குதலே இந்த அறிக்கை.

இதனால் சிறிலங்காவின் அதிபருக்கோ, பாதுகாப்புச் செயலருக்கோ அல்லது பாதுகாப்புப் படையினருக்கோ மட்டும் பிரச்சினையில்லை. இது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் எதிரான செயற்பாடு.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும். 15 நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுடன் இதுபற்றி ஆலோசனை நடத்த சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எதிரான இந்த அறிக்கைக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுதிரள வேண்டும்.

வேறுபாடுகளை ஓரத்தில் வைத்து விட்டு சுதந்திரம், அமைதி, கௌவரத்தைக் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும்.

பிரபாகரனையும் அவரது 47 தளபதிகளையும் மீட்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. அதை நாம் தோற்கடித்தோம்.

அதனால் மேற்குலகம் சிறிலங்கா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறது.

சிறிலங்கா அரசுக்கு எதிராக செயற்படும் புலிகளின் தலைவர்களான உருத்திரகுமாரன், விநாயகம், நெடியவன் போன்றோர் அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளில் இருந்தே இயங்குகின்றனர்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண ஓமல்பே சோபித தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோரும் இந்தச் ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை: